ஆண்டு இறுதியில் புதிய கார் புக் பண்றீங்களா? ரொம்ப கவனமா இருங்க!
வரும் ஜனவரி 1 முதல் பெரும்பாலான கார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், ஆண்டு இறுதியில் கார் புக்கிங் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் விலை உயர்வை தவிர்த்துக் கொள்வதற்கு உள்ள கடைசி வாய்ப்பு குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் கார் மாடல்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பொறுத்து அமைகிறது. அதுவும், டிசம்பர் மாதத்தில் இருப்பில் கார்கள் தேங்குவதை தவிர்க்க, உற்பத்தியை சில நிறுவனங்கள் குறைத்துவிடுவது வழக்கம். அதாவது, டிசம்பரில் வாங்கினால், காரின் தயாரிப்பு ஓர் ஆண்டுக்கான மதிப்பை இழக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. எனவே, புத்தாண்டில் கார் வாங்க பல வாடிக்கையாளர்கள் பிரியப்படுவதே இதற்கு காரணம்.

இந்த சூழலில், சில முன்னணி நிறுவனங்களின் அதிக டிமான்ட் உள்ள கார்களை கடைசி நேரத்தில் பெறுவதற்கு இப்போது வாய்ப்புகள் குறைவாக உள்ளன. ஆனால், இப்போது அதிக டிமான்ட் உள்ள கார்களை விலை உயர்வுக்கு முன் பெறுவதற்கு ஒரே வழிதான் உள்ளது.

ஏற்கனவே புக்கிங் செய்திருப்பவர்கள் விலை உயர்வை தவிர்க்க விரும்பினால், வரும் 31ந் தேதிக்குள் காருக்கு 'இன்வாய்ஸ்' எனப்படும் விலை ஒப்பந்த உடன்படிக்கை ஆவணத்தை செய்து கொள்வதுதான் ஒரே வழி.

ஜனவரி 1ந் தேதிக்கு பிறகு 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட காருக்கு இன்வாய்ஸ் போட்டாலும், அது விலை உயர்வுடன் கூடியதாகவே இருக்கும். எனவே, ஆண்டு இறுதியில் புதிய கார் புக்கிங் செய்யும்போது மிக மிக கவனமாக இருப்பது அவசியம்.

ஒருவேளை நீங்கள் விலை உயர்வை தவிர்க்க விரும்பினால், விற்பனை பிரதிநிதியிடம் இருப்பில் கார் மாடல் இருந்தால், உடனடியாக இன்வாய்ஸ் போடச் சொல்லுங்கள். கார் இருப்பில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதிக டிமான்ட் உள்ள கார்களுக்கு, வேறு வாடிக்கையாளர் புத்தாண்டில் வாங்க முடிவு செய்து புக்கிங்கை கேன்சல் செய்தாலோ அல்லது டீலரில் தகவல் தெரிவித்தால் மட்டுமே, இது சாத்தியமாக அமையும்.

அதுவும், நீங்கள் கேட்ட வேரியண்ட், வண்ணத் தேர்வு ஆகியவை ஒத்து வர வேண்டும். இல்லையெனில், வேறு வாடிக்கையாளர் புக்கிங்கை கேன்சல் செய்தாலும், அந்த வண்ணத் தேர்வு உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். எனவே, இரண்டாவது வண்ணத் தேர்வு குறித்தும் நீங்கள் ஒரு யோசனையுடன் இருப்பது நல்லது.

மேலும், டீலரில் உள்ள விற்பனை பிரதிநிதியிடம் தொடர்ந்து இது குறித்த கேட்டு தெரிந்து கொள்வதும் அவசியம். அவர்கள் தொடர்ந்து இதனை சரிபார்த்து வரும்பட்சத்தில்தான், விலை உயர்வுக்கு முன்னர் இன்வாய்ஸ் போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

விலை உயர்வு குறித்து பெரிய கவலை இல்லை. 2021ம் ஆண்டு தயாரிப்பு காரை வாங்க விரும்புவோர் இப்போதே டீலர் விற்பனை பிரதிநிதியிடம் சொல்லி வைக்க வேண்டும். இல்லையெனில், இந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட காரை உங்கள் தலையில் விலை உயர்வுடன் கட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தை தெளிவாக கூறிவிடுங்கள்.

உதாரணத்திற்கு 2021ம் ஜனவரியில் ஆண்டு உற்பத்தி செய்யப்படும் கார்கள் டீலருக்கு வந்து சேர்வதற்கு 20 நாட்கள் வரை ஆகலாம். எனவே, ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உங்களுக்கான 2021ம் ஆண்டு தயாரிப்பு கார் கிடைக்கும்.

ஆனால், இதுவும் அந்த காருக்கு எவ்வளவு புக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது மற்றும் உற்பத்தி எண்ணிக்கையை பொறுத்தே அமையும். சில நிறுவனங்கள் இருப்பில் தேங்கி உள்ள கார்களை விற்பனை செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, புக்கிங் செய்தவர்கள் அல்லது இந்த வாரம் செய்யப் போகிறவர்கள், உங்களது விருப்பத்தை தெளிவாக சொல்வது அவசியம். இல்லையெனில், சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.


Click it and Unblock the Notifications








