போலீஸ் வண்டிய நிறுத்தினா நோ டென்ஷன்... இந்த விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!
வாகனத் தணிக்கைகாக போலீசார் நிறுத்தும்போது வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகனத் தணிக்கையின்போது போலீசார் வாகனத்தை நிறுத்தும்போது பலரும் அச்சப்பட்டுக் கொண்டு நிற்காமல் செல்கின்றனர். வாகனத்தை வேகமாக செலுத்துவதும், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் சில வேளையில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. வாகனத் தணிக்கையின்போது போலீசார் வண்டியை நிறுத்தினால் பதட்டப்படாமல் கீழ்கண்ட விஷயங்களை மனதில் வைத்து செயல்படுங்கள்.

வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார் கையில் செல்லான் புத்தகம் அல்லது செல்லான் போடுவதற்கான எந்திரம் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் செல்லான் புத்தகம் அல்லது அதற்குரிய மின்னணு எந்திரம் இல்லையெனில், அபராதத் தொகை கட்ட வேண்டாம்.

போலீசார் வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்கும்போது பரிசோதிப்பதற்கு தரலாம். ஆனால், ஒப்படைக்கும் அவசியமில்லை. வலுக்கட்டாயமாக உங்களிடமிருந்து பெற முடியாது. மோட்டார் வாகனச் சட்டம் 130ன் படி, காவல் துறை சீருடையில் பணியில் உள்ள போலீசார் பொது இடங்களில் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை கேட்கும்போது தரலாம். ஆனால், ஒப்படைக்க தேவையில்லை என்று தெரிவிக்கிறது.

ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, அதிவேகம், வாகனத்தில் புகைப்பிடிப்பது, நம்பர் பிளேட்டில் எண்கள் தெளிவாக இல்லாமல் இருப்பது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை செலுத்துவது, இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, மாசு உமிழ்வு சான்று இல்லாமல் வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்க விதிகள் உண்டு.

உங்கள் மீது தவறு இருந்தாலும், பணியில் இருக்கும் காவலரின் சீருடையில் பெயர் விபர குறிப்பு அடங்கிய பேட்ஜ் இல்லாமல் இருந்தால், நீங்கள் அவரது அடையாள அட்டையை கேட்டு சரிபார்த்த பின்னரே, அபராதம் செலுத்தலாம். இல்லையெனில், அபராதம் செலுத்த இயலாது என்று கூறி விடுங்கள். அதேபோன்று, ஆவணங்களையும் கொடுக்க வேண்டாம்.

சப்- இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கு மேல் ரேங்கில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் மட்டுமே அபராதம் செலுத்த வேண்டும். சாதாரண காவலர்கள் அபராதம் வசூலிக்க முடியாது. நீங்கள் கட்டவும் வேண்டாம்.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுவது, வாகனத்திற்கு பதிவு இல்லாமலும், பர்மிட் இல்லாமலும் ஓட்டுவது உறுதியானால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆவணங்களை சரியாக வைத்திருப்பதும், எப்போதுமே கையில் நகலை வைத்திருப்பதும் அவசியம்.

சிக்னல் ஜம்ப், அதிக பாரம், மதுபோதையில் டிரைவிங் மற்றும் மொபைல்போன் பேசிக் கொண்டே ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக உங்களது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்வதற்கு சட்டத்தில் வழி உண்டு. ஒருவேளை, உங்களது ஓட்டுனர் உரிமத்தை போலீசார் பெற்றுக் கொள்ளும்போது, அதற்கு உரிய அத்தாட்சியை எழுதி வாங்குவதையும் மறந்துவிடாதீர்.

நோ பார்க்கிங்கில் நிற்கும்போது உங்களது வாகனத்தை போலீசார் எடுத்துச் செல்லும்போது காரில் யாரும் இருக்கக்கூடாது. காரிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னரே டோ செய்து எடுத்துச் செல்ல முடியும்.

போக்குவரத்து விதிமீறலுக்காக நீங்கள் கைது செய்யப்படும்பட்சத்தில், அடுத்த 24 மணிநேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் விதி.

போலீசாரிடம் வாக்குவாதத்தை தவிர்த்து, உங்களது தவறுக்கான விளக்கத்தை புரியும்படி கூறலாம். இனி தவறு செய்யமாட்டேன் என்ற உறுதி மொழி கொடுத்தாலும் உங்களை அனுப்பி வைக்க அதிக வாய்ப்புள்ளது.

உங்கள் மீது தவறு இருந்தாலும் எடுத்தவுடனே லஞ்சம் கொடுத்து தப்பும் முயற்சியை கைவிடுங்கள். மேலும், லஞ்சம் கேட்டோ அல்லது பிற வகையில் போலீசார் உங்களை துன்புறுத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழியுண்டு.

விதிமீறலில் ஈடுபடும்போது உங்களுக்கு கொடுக்கப்படும் செலானில் எந்த விதமீறலில் புகார் பதிவு செய்யப்படுகிறது, எந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடக்கும், வழக்கு விசாரண தேதி, வாகன விபரம், புகார் பதிவு செய்யும் அதிகாரியின் கையொப்பம், உங்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்கள் ஆகியவற்றின் விபரங்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சாதாரண போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டிகளை கைது செய்யவோ முடியாது. வாகன புகை பரிசோதனை சான்றையும் அவர்கள் கேட்க முடியாது. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க முடியும். மேலும், வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அதிகாரம் இல்லை.

மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவரை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய முடியும் . மேலும், பெண் காவலர் இல்லாதபட்சத்தில், அவரை வரவழைத்து ஆய்வு செய்ய சொல்லவும் பெண்களுக்கு உரிமை உண்டு.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதுடன், போலீசாருக்கு பயந்து விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதேநேரத்தில், வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில்தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பதையும் மனதில் வைக்கவும்.


Click it and Unblock the Notifications








