சென்னையில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகிறது
அடுத்த வாரம் முதல் சென்னையில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது ஏற்படும் உயிரிழப்புகள் ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை பின்பற்றி தற்போது கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதை சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளனர். அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் விபத்துக்களை கருதி இந்த சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க உள்ளனர்.

அபராதம்
முதல் முறை சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சீட் பெல்ட் அணியாமல் வருபவருக்கு ஒவ்வொரு முறையும் ரூ.300 அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம்
சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவதன் அவசியம் குறித்து தற்போது போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அடுத்த வாரம் முதல் சீட் பெல்ட் அணிந்து கொண்டுதான் கார் ஓட்டி வர வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பயன்
விபத்தின்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே உயிர் காக்கும் காற்றுப் பைகள் மூலம் பாதுகாப்பு கிடைக்கும். இல்லையெனில், காற்றுப் பைகள் விரிந்து எஜமானரை காப்பாற்ற முயன்றாலும் பயனில்லை.

அபாயம்
அதிவேகத்தில் செல்லும்போது விபத்து நிகழ்ந்தால் காரிலிருந்து தூக்கி வீசப்படும் நிலை இருக்கிறது. இதனை சீட் பெல்ட் கண்டிப்பாக தவிர்க்கும். சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவதால் உயிரிழப்பு தவிர்க்கும் வாய்ப்பு இருப்பதோடு, பெரிய காயங்களிலிருந்தும் தவிர்க்க ஏதுவாகிறது. சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் அதன் அவசியம் குறித்தும் ஏற்கனவே நாம் செய்திகளை வழங்கியிருக்கிறோம்.

அலட்சியம்
குறைந்த தூர பயணம் என்கிற நினைப்பிலும், அலட்சியத்தாலும் பலர் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுகின்றனர். விபத்து என்பது நாள், நேரம் பார்த்து நடப்பதில்லை. எனவே, காரில் ஏறி அமர்ந்தவுடன் உடனடியாக சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

இருந்தாலும் கட்டாயம்
விபத்து நிகழும்போது சில சமயங்களில் சீட் பெல்ட்டுகளால் தோலில் சிராய்ப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. ஆனால், உயிரைவிட இந்த காயங்கள் பெரியதாக கருத முடியாது. எனவே, சீட் பெல்ட் அணியாமல் ஹாயாக செல்வதாக நினைத்துக் கொண்டு உயிருக்கு உலை வைத்துக் கொள்ள வேண்டாம். ஓட்டுபவரை தவிர நம்பி வருபவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. நல்ல நேரம் பார்த்து விபத்துக்கள் நடப்பதில்லை. எனவே, சீட் பெல்ட் அணிந்து கொண்டு கார் ஓட்டுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








