விபத்தை தவிர்க்க கார் ஓட்டுனர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய '2 செகண்ட் ரூல்' !
நகர்ப்புற சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலையாக இருந்தாலும் இன்று பல ஓட்டுனர்கள், முன்னால் செல்லும் வாகனத்தை இடித்துக் கொண்டு செல்வது போல மிக நெருக்கமாக செல்வதை அன்றாடம் பார்க்க முடிகிறது.

முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தாலும் அல்லது சமிக்ஞை கொடுக்காமல் திரும்பினாலும் இதில் ஆபத்து இருக்கிறது என்பதை இந்த ஓட்டுனர்கள் உணர்வதில்லை. மிக நெருக்கமாக டெயில்கேட் செய்து பின்தொடரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்களுடன் மோதி இன்று பல விபத்துக்கள் நடக்கின்றன.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க, 2 செகண்ட் ரூல் [சில இடங்களில் 3 செகண்ட் ரூல் கடைபிடிக்கப்படுகிறது] என்று குறிப்பிடப்படும் 2 வினாடி இடைவெளி விதியை கார் ஓட்டுனர்கள் பின்பற்றுவது அவசியம். அதுசரி, 2 செகண்ட் ரூல் என்று கூறாமல், ஒரு வினாடி, இரண்டு வினாடி, நான்கு வினாடி இடைவெளி கடைபிடிக்கக்கூடாதா என்ற கேள்வி மனதில் எழுகிறது.

ஆம், நீங்கள் எந்த வேகத்தில் பயணித்தாலும், இந்த 2 செகண்ட் ரூல் பொருத்தமானதாக கருதப்படுகிறது. இதனை பின்பற்றும்போது, விபத்துக்களை தவிர்க்க முடியும். சரி, முன்னால் செல்லும் வாகனத்துடன் 2 செகண்ட் ரூலை எவ்வாறு கணித்து செல்வது என்ற அடுத்த சந்தேகம் எழுகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தை முன்னால் செல்லும் கார் கடந்து சென்று, அடுத்த 2 வினாடிகளில் உங்களது கார் கடந்தால் போதிய இடைவெளி இருக்கிறது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு விளக்கு கம்பம் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை அடையாளமாக கொண்டு அதே இடத்தை உங்களது கார் கடப்பதற்கு எத்தனை வினாடிகள் எடுக்கிறது என்பதை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.

மேலும், 2 வினாடிகளுக்கு மேல் இடைவெளியில் முன்னால் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்தால் ஆபத்தில்லை. ஆனால், அதற்குள் இருக்கும்போது உங்களது வாகனத்தின் வேகத்தை குறைத்துக் கொள்வது விபத்துக்களை தவிர்க்க உதவும்.

மழை, பனிமூட்டம் நிலவும் வேளைகளில் 4 செகண்ட் ரூலை மனதில் வைத்து ஓட்டுவது அவசியம். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறைந்தது 4 வினாடிகள் இடைவெளி விட்டு செல்வது அவசியம்.

மிக மிக மோசமான வானிலையின்போது 10 வினாடிகள் இடைவெளியை பின்பற்றுவது உத்தமம்.

உங்களுக்கு 2 செகண்ட் ரூல் பிடிபடவில்லை எனில், முன்னால் செல்லும் காருடன் 7 அல்லது 8 அடி இடைவெளி விட்டு ஓட்டுவதும் விபத்துக்களை தவிர்க்க உதவும். புதிதாக கார் ஓட்டுபவர்கள் குறைந்தது 15 அடி தூர இடைவெளியில் செல்வது அவசியம்.

ஒரு கார் 60 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 30 மீட்டர் தூரத்தில் நிற்கும். இதன் அடிப்படையில்தான் 7 அல்லது 8 அடி இடைவெளி போதுமானதாக இருக்கும்.

மற்றொரு விதியும் உண்டு. அது நடைமுறையில் சாத்தியப்படுவதற்கு கடினம். மிகவும் பாதுகாப்பாக ஓட்ட விரும்புவர்கள், நகரத்தில் ஒரு கார் அளவுக்கு இடைவெளியும், நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அளவுக்கு இடைவெளியும் வைத்து ஓட்ட வேண்டும்.

போதிய இடைவெளி விட்டு ஓட்டுவதன் மூலமாக, பெரிய விபத்துக்கள் மட்டுமின்றி, முன்னால் செல்லும் வாகனங்களுடன் லேசாக மோதி காரில் ஏற்படும் சிறிய சிராய்ப்புகளை நிச்சயம் தவிர்க்க முடியும். அத்துடன், மன அழுத்தத்தையும் வெகுவாக தவிர்க்க முடியும்.

கனரக வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கூடுதல் இடைவெளி விட்டு செல்வது அவசியம். இதனை மனதில் வைத்து ஓட்டும்போது விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க வழிகள் உண்டு.

இந்த விதிகளை பின்பற்றும்போது மொபைல்போனில் பேசுவது, ஏசியை அட்ஜெஸ்ட் செய்வது உள்ளிட்டவற்றில் உங்கள் கவனம் பிறழாமல் இருப்பதும் அவசியம். இதுபோன்ற சமயங்களில் இந்த 2 செகண்ட் ரூல் பொருந்தாது.


Click it and Unblock the Notifications








