கார் பம்பரில் மூடியுடன் இருக்கும் இந்த துளை எதற்கு தெரியுமா?
கார் பம்பரில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறிய துளையின் பயன்பாடு பற்றிய தகவலை இங்கே காணலாம்.
காரில் முன்புற பம்பரில் சிறிய மூடியுடன் கூடிய துளை இருப்பதை கண்டிருப்பீர்கள். அந்த துளை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், சிலருக்கு அந்த துளை எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாத நிலையை காண முடிகிறது. எனவே, அதனை பற்றிய சில விபரங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

காரில் ரிப்பேர் ஏற்பட்டு நடுவழியில் நின்றுவிட்டாலோ அல்லது சேறுசகதி மிகுந்த பகுதியில் மாட்டிக் கொள்ளும்போது, இந்த துளையில் உள்ளே வெல்டு நட்டை உலோக கம்பியுடன் இணைத்து காரை இழுப்பதற்காகத்தான் இந்த துளை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான மூடி செவ்வக வடிவிலும், வட்ட வடிவிலும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

கார்களின் முன்புற பம்பரில் இருக்கும் மூடியுடன் கூடிய துளையின் உள்ளே நட் போன்ற திருகு அமைப்பு பம்பர் பீமில் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த திருகு அமைப்புடன், 'Tow Eye' என்ற சற்று நீளமான திருகு வசதியுடன் கூடிய உலோக கம்பியை அதில் திருகிக் கொண்டு காரை இழுத்துச் செல்ல முடியும். இந்த டோ ஐ உலோக கம்பி கார் வாங்கும்போது தரப்படும் கார் கிட்டில் கொடுக்கப்படும்.

இந்த டோ ஐ அல்லது டோ ஹூக் எனப்படும் இந்த நீளமான கம்பியுடன் கூடிய உலோக போல்ட்டை வெல்டு நட்டில் எளிதாக திருக முடியும். அவ்வாறு திருகிவிட்டு, போல்ட்டில் இருக்கும் கம்பி வளையத்தில் கயிறு அல்லது இழுவை வடத்தை இணைத்து மற்றொரு கார் அல்லது வாகனத்துடன் இணைத்து இழுக்க முடியும்.

துளையில் இருக்கும் மூடியை விரலை வைத்து லேசாக நெம்பினாலே திறந்து கொள்ளும். எனவே, இது மிக வலுவானதாக இருக்கும் என்பதுடன், எளிதாக இணைத்துக் கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

இப்போது வரும் கார்களில் முன்புறம் மற்றும் பின்புற பம்பர்களில் இந்த டோ ஐ எனப்படும் போல்ட்டும் அதற்கான வெல்டு நட்டும் கொடுக்கப்படுகிறது. பல ஆண்டுகள் கார் வைத்திருப்பவர்களுக்கு கூட இது எதற்காக என்பது தெரியாமல் இருப்பதை காண முடிகிறது. இதனை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது என்பதற்காகவே இந்த தகவலை பகிர்ந்துள்ளோம்.


Click it and Unblock the Notifications








