பட்ஜெட் எஃபெக்ட்: அனைத்து ரக கார் விலையும் உயருகிறது!
மத்திய பட்ஜெட்டில் கார்கள் மீது கூடுதல் வரி அறிவிக்கப்பட்டிருப்பதால், அனைத்து ரக கார்களின் விலையும் உயர இருக்கிறது. 2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
சுற்றுச்சூழலை மனதில் கொண்டு பழைய கார்களுக்கான காலாவதி காலம், சரக்கு மற்றும் சேவை வரிக்கான கொள்கையில் அரசின் நிலைப்பாடு, மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான வரிச்சலுகைகள் உட்பட ஆட்டோமொபைல் துறை சார்பில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், கார் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில், அனைத்து ரக கார்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது கார் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது. மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, அனைத்து ரக கார்கள் மீதும் ஒரு சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
டீசல் கார்கள் மீது 2.5 சதவீதம் கூடுதல் வரியும், எஸ்யூவி, எம்பிவி கார்கள் மீது 4 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் விரைவில் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த வரி விதிப்பால் டொயோட்டா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு கூடுதல் பாதிப்பு இருக்கும்.
இந்த பட்ஜெட்டால் கார் நிறுவனங்கள் ஒரு அளவில் பாதிக்கப்பட்டாலும், இந்த கூடுதல் வரிச்சுமையை கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தலையில்தான் கட்டும். எனவே, புதிய கார் வாங்குவோருக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே, நாடுமுழுவதும் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 50,000 கிமீ நீளத்துக்கான மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்காக ரூ.55,000 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த ஆண்டிற்குள் 10,000 கிமீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








