கார்கள் - பேருந்துகளில் ஏபிஎஸ் பொருத்த காலக்கெடு நிர்னயித்தது மத்திய அரசு
அனைத்து கார்கள் மற்றும் பேருந்துகளிலும் (ஏபிஎஸ்) ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டத்தினை பொருத்த மத்திய அரசு காலக்கெடு நிர்னயித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஏபிஎஸ் எனப்படும் ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டத்தினை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து கார்கள் மற்றும் பேருந்துகளிலும் கட்டாயமாக பொருத்த வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு நிர்னயித்துள்ளது.

ஏபிஎஸ் என்றால் என்ன?
திடிரென பிரேக் பிடிக்கும் போது வீல்கள் லாக் ஆகாமல் தடுக்கும் அமைப்பே ஏபிஎஸ் எனப்படும் ஆண்ட்டி பிரேக்கிங் சிஸ்டமாகும். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதை தவிர்க்க முடியும். இதன் காரணமாக வாகன விபத்துகளை தடுக்கலாம்.

இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி ஏபிஎஸ் பொருத்தப்பட்ட வாகங்களில் 20% அளவிற்கு விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏபிஎஸ் அமைப்பு வாகனங்களை விபத்துக்களில் இருந்து காக்கவல்லது.

இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தயாரிக்கப்படும் புதிய கார்கள் மற்றும் பேருந்துகளில் ஏபிஎஸ் கட்டாயமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

மேலும், தற்போது இருக்கக்கூடிய மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு 2019 ஏப்ரல் என மத்திய அரசு நிர்னயித்துள்ளது.

பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் ஏபிஎஸ் என்பது ஒரு விருப்பத்தின் பேரில் கிடைக்கக்கூடிய அம்சமாகவே இருந்து வருகிறது. இனி 2019 ஏப்ரல் முதல் அனைத்து புதிய கார்களிலும் அது நிலையான அம்சமாக கிடைக்கும்.

பொதுவாகவே உலகளவில் நடக்கக்கூடிய வாகன விபத்துகளில் இந்தியாவில் தான் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் நடந்த சாலை விபத்துக்களில் 146,133 பேர் இறந்துள்ளனர், இதுவே 2014ல் 139,671 பேராக இருந்தது. வருடா வருடம் இந்த எண்ணிக்கை 4 %- 5 % வரை அதிகரித்து வருகிறது.

ஏற்கெனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் வரும் மார்ச்31க்குள் பிஎஸ்4 என்ற மாசு கட்டுப்பாட்டு தர விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என மத்திய அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.
மாருதியின் இக்னிஸ் மாடல் காரின் படங்கள் :


Click it and Unblock the Notifications








