பெங்களூரில் சர்வதேச விமானக் கண்காட்சி துவங்கியது... பார்ப்போரை பரவசப்படுத்தும் சாகச நிகழ்ச்சிகள்!
ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப் படை தளத்தில் துவங்கி இருக்கிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியை துவங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி நேற்று துவங்கிய நிலையில், நாளை முடிவடைகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விமானக் கண்காட்சியில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 78 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 601 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட தங்களது நவீன தயாரிப்புகளுடன் கலந்துகொண்டுள்ளன.

அதிநவீன போர் விமானங்கள், விமானங்களுக்கான உதிரிபாகங்கள், மின்னணு சாதனங்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் பிரம்மோஸ் ஏவுகணை, தேஜஸ் போர் விமானம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், உள்நாட்டு தயாரிப்பாக உருவாகி வரும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் மாதிரி மாடலும், சுகோய் எஸ்யூ-30எம்கேஐ போர் விமானமும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. முதல்முறையாக அமெரிக்காவின் பி-1பி லேன்சர் போர் விமானம் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விமான கண்காட்சியை துவங்கி வைத்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,"இந்தியாவின் ராணுவ வல்லமையையும், பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்களையும் உலக அரங்கில் பரைசாற்றும் வகையில் இந்த கண்காட்சிய நடக்கிறது.

அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் ராணுவத்தை நவீனப்படுத்த பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளோம். பாதுகாப்புத் துறைக்கு நேரடி அன்னிய முதலீட்டை பெறும் திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பல முனைகளில் இருந்தும் அச்சுறுத்தல்கள் உள்ளன. அதனை முறியடிக்கும் வகையில் இந்தியா மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்கே-1 ஏ போர் விமானத்தை தயாரிப்பதற்கு எச்ஏஎல் நிறுவனத்திற்கு ரூ.48,000 கோடி மதிப்புடைய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவும் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கிறது," என்று கூறினார்.

இந்த விமான கண்காட்சியில் விமான சாகச நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதில், எல்சிஏ பயிற்சி விமானம், எச்டிடி-40, ஐஜேடி, ஹாக் எம்கே 132 மற்றும் சிவில் டு-228 ஆகிய விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடக்கிது. இந்த கண்காட்சி நாளை நிறைவடைகிறது.


Click it and Unblock the Notifications








