16 மணிநேர பயணம்... இந்தியாவின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை துவங்குகிறது ஏர் இந்தியா!
இந்தியாவிலிருந்து மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது. இதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கொரோனாவால் விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைக்கு தொடர்ந்து இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பெங்களூர் நகரிலிருந்து அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு விரைவில் புதிய விமான சேவை துவங்கப்பட உள்ளது.

வரும் ஜனவரி 11ந் தேதி முதல் இந்த புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் துவங்க இருக்கிறது. பெங்களூரிலிருந்து நேரடியாக அமெரிக்காவிற்கு சென்றடையும் வகையில் இந்த புதிய விமான சேவை இருக்கும்.

அதாவது, பெங்களூர் நகரில் புறப்படும் விமானம் இடையில் எங்கும் நிற்காமல் நேரடியாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை 16 மணிநேர பயணத்தில் அடையும். அதேபோன்றே, மறுமார்க்கத்திலும் இந்த பயணம் இடைநிலலாமல் பெங்களூர் வந்தடையும் வகையில் இருக்கும்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகரம் போல விளங்கும் பெங்களூர் நகரையும், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகரம் போல விளங்கும் சான் பிரான்சிஸ்கோ நகரையும் நேரடியாக இணைக்கும் வகையில் இந்த விமான சேவை அமையும்.

மேலும், இந்த இரு நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கும் நெருக்கமான வர்த்தக தொடர்பு இருப்பதால், அதில் பணிபுரியும் கார்ப்பரேட் பணியாளர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.

இந்த விமான சேவை துவங்கப்பட்ட உடன் இதுதான் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் இடைநில்லாமல் செல்லும் மிக நீண்ட தூர விமான சேவையாக இருக்கும். மொத்தம் 14,000 கிலோமீட்டர் தூரத்தை இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணிக்கும்.

இந்த விமான சேவைக்காக போயிங் 777 200 எல்ஆர் விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விமானத்தில் 238 பேர் பயணிக்கும் வசதிகளை பெற்றிருக்கும். உலகின் பெரும்பாலான நீண்ட தூர விமான சேவைகளில் இந்த விமானம்தான் இப்போது பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக இதுபோன்ற மிக நீண்ட தூர வழித்தடங்களில் நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால், அதிக எரிபொருள் செலவு பிடித்தது. இந்த கான்செப்ட்டை உடைக்கும் வகையில், இந்த பிரமாண்ட விமானமானது இரண்டு எஞ்சின்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

இந்த விமானத்தில் ஃப்ளை பை ஒயர் மின்னணு கட்டுப்பாட்டு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், பைலட்டுகள் விமானத்தின் தரவுகளை பெற்று எளிதாக கட்டுப்படுவதற்கும், இயக்குவதற்குமான வாய்ப்பை பெற்றனர். இந்த விமானம் அதிவேகத்தில் பறக்கும்போது சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கும், திரும்பும்போது ஏற்படும் அபாயங்களை தவிர்ப்பதற்கும் இந்த புதிய கட்டுப்பாட்டு வசதி பெரிதும் கைகொடுகிறது.

போயிங் 777 விமானத்தில் பல மாடல்கள் உள்ளன. இதில், 777 200LR என்ற இந்த மாடலானது மணிக்கு 892 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாடலில் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானம் 209 அடி நீளமும், 212 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 348 டன் எடை கொண்டதாகவும், 138 டன் எரிபொருளுடன் பறக்கும் வகையில் இந்த விமானம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








