தானியங்கி பறக்கும் காரை தயாரிக்கும் ஏர்பஸ் விமான நிறுவனம்!
விமான தயாரிப்பு துறையில் ஜாம்பவான விளங்கும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் தானியங்கி பறக்கும் காரை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள சிலிக்கான் வேலியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த பறக்கும் காரை தயாரிக்கும் ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
கண்டம் விட்டு கண்டம் செல்லும் விமானங்கள், உள்நாட்டு போக்குவரத்து தேவைகளுக்கான விமானங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது நகர்ப்புறத்திற்குள்ளாக பயன்படும் வகையிலான பறக்கும் காரை தயாரிக்க இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பறக்கும் கார் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

போக்குவரத்து நெரிசல்
தற்போது உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். இதுவே அடுத்த தசாப்தத்தின் முடிவில் 60 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போதுள்ளதைவிட நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரிக்கும். இந்த அழுத்தங்களை சமாளிப்பதற்கு புதிய போக்குவரத்து சாதனங்கள் அவசியம் என்று கருதி இந்த தானியங்கி பறக்கும் கார் திட்டத்தை ஏர்பஸ் கையிலெடுத்துள்ளது.

வாஹனா
வாஹனா என்ற குறியீட்டுப் பெயரில் இந்த பறக்கும் கார் திட்டம் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப மண்டலத்தில் இந்த புதிய காரை தயாரிக்கும் ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு ரோடின் லைசாஃப் என்ற பொறியாளர் தலைமையேற்றிருக்கிறார்.

துரிதகதியில் பணிகள்...
ஏர்பஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஏ3 என்ற நிறுவனம்தான் இந்த பறக்கும் காரை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. பறக்கும் காருக்கு தேவையான தானியங்கி தொழில்நுட்பம், பேட்டரி, ஏவியோனிக்ஸ் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இங்குதான் நடக்கிறது.

சவால்கள்
இந்த திட்டம் மிக சவாலானது என்று ரோடின் லைசாஃப் கூறியிருக்கிறார். தானியங்கி கார் தொழில்நுட்பம் ஏற்கனவே கார்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதனை பறக்கும் காரில் செயல்படுத்துவதில் பல சவால்கள் இருக்கின்றன. குறிப்பாக, தடைகள் மற்றும் எதிரில் உள்ள பொருட்களை கண்டறிந்து பறப்பதற்கான தொழில்நுட்பத்தை தயாரிப்பது சவால் நிறைந்தது என்று கூறியிருக்கிறார்.

விரைவில்...
அடுத்த ஆண்டு ஏர்பஸ் தானியங்கி பறக்கும் காரின் புரோட்டோடைப் தயாராகிவிடும் என்பதோடு, சோதனைகளும் துவங்க இருக்கின்றன. இருப்பினும், பரிசோதனைகள் முடிந்து, சட்டப் பிரச்னைகளை எதிர்கொண்டு விற்பனைக்கு வருவதற்கு 10 ஆண்டுகள் வரை பிடிக்கும் என்று ஏர்பஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவை அதிகம்
இந்த தானியங்கி பறக்கும் காருக்கு உலக அளவில் அதிக தேவை இருக்கும் என்று கருதுவதாக ரோடின் தெரிவித்தார். மேலும், ஒரு நகரத்திற்குள்ளான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மிக ஏற்றதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்றதொரு சிறிய ரக ஆள் இல்லாமல் இயங்கும் விமானத்தை சிங்கப்பூரை சேர்ந்த டிரேபல் என்ற நிறுவனம் அந்நாட்டு அரசுடன் இணைந்து தயாரித்து வருகிறது. சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் சரக்கு பரிமாற்ற பணிகளில் இந்த ஆள் இல்லா தானியங்கி விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ஸ்கைவேஸ் என்று குறிப்பிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications








