ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்!
இந்தியாவின் அதிவிரைவு சொகுசு ரயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
ரயில் பயணம் என்றாலே எல்லோருக்கும் தனி உற்சாகம் பிறந்துவிடும். ஆனால், நீண்ட தூர பயணம் எனும்போது சற்று அலுப்பு தட்டும் விஷயமாகவே இருக்கும். ஆனால், சொகுசு அம்சங்கள் கொண்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பதற்கு பலர் விருப்பப்படுகின்றனர்.

விரைவு, சொகுசு, இனிமையான பயண அனுபவத்தை தருவதே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் தனி மவுசு இருப்பதற்கான காரணங்கள்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பலமுறை பயணித்தவர்களுக்கு கூட அந்த ரயிலின் சேவைகள் பற்றி தெரிந்திருந்தாலும், அதன் சுவாரஸ்ய வரலாறு பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த செய்தியில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ராஜ்தானி என்பதற்கு இந்தியில் தலைநகரம் என்று பொருள். அதுவே, இந்த ரயிலுக்கான பெயராக வைக்கப்பட்டது. தலைநகர் டெல்லியுடன் நாட்டின் இதர முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில், அறிமுகம் செய்யப்பட்ட சொகுசு ரயில்தான் ராஜ்தானி.

கடந்த 1969ம் ஆண்டு மார்ச் 3ந் தேதி முதல் முதலாக டெல்லியிலிருந்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஹவுராவிற்கு முதல் ராஜ்தானி ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில், அந்த ரயில் 1,445 கிமீ தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் கடந்தது.

இந்த ரயில் WDM-4 டீசல் எஞ்சின் மூலமாக இயக்கப்பட்டது. மணிக்கு அதிகபட்சமாக 120 கிமீ வேகம் வரை இயக்கப்பட்டது. அந்த சமயத்தில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட ஒரே ரயில் என்ற பெருமையும், தெற்காசியாவில் அதிவேக ரயில் என்ற பெருமையையும் பெற்றது.

டெல்லி- ஹவுரா இடையிலான முதல் ராஜ்தானி ரயிலில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 4 ஏசி சேர் கார்கள், 2 ஜெனரேட்டர் பெட்டிகள், 2 சமையல்கூட பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. டெல்லி- ஹவுரா இடையே இடைநில்லா சேவையாக இருந்தது. தொழில்நுட்ப காரணங்களுக்காக கான்பூர், முகல்சாரய் மற்றும் காமோ ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது.

தற்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 140 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. சராசரி வேகத்தில் மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் முதலிடம் வகிக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகம் வரை இயக்க அனுமதிக்கப்பட்டு இருக்கும் இந்த ரயில், சராசரியாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்கிறது.

மிக நீண்ட தூரம் பயணிக்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெருமையை திருவனந்தபுரம் ராஜ்தானி பெறுகிறது. இந்த ரயில் 3,131 கிமீ தூரம் பயணிக்கிறது. கோட்டோ மற்றும் வதோதரா ரயில் நிலையங்களுக்கு இடையில் 521 கிமீ தூரம் இடை நில்லாமல் செல்கிறது. குறைவான தூரம் பயணிப்பது ஜம்முதாவி ராஜ்தானி. இந்த ரயில் 577 கிமீ தூரம் பயணிக்கிறது.
இதர சுவாரஸ்ய செய்திகள்:

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயன்படுத்தபடும் உயர்வை பெட்டிகள் கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெர்மனியை சேர்ந்த எல்எச்பி ஜிஎம்பிஎச் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இலகுவான, அதிக உறுதியான பெட்டிகளாகவும், பராமரிக்க எளிதான அம்சங்களை ராஜ்தானி ரயில் பெட்டிகள் பெற்றிருக்கின்றன. விபத்துக்களின்போது இந்த ரயில் பெட்டிகள் அதிக சேதமடையாது என்பதுடன், பயணிகளுக்கு அதிக பாதுகாப்பையும் வழங்கும் கட்டமைப்பை பெற்றிருக்கிறது. மணிக்கு 200 கிமீ வேகம் வரை இந்த பெட்டிகள் செல்லும் திறன் வாய்ந்தது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணம் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோன்று, இந்த ரயிலை இயக்கும் ஓட்டுனர்களுக்கும் பிற ரயில் ஓட்டுனர்களை விட சம்பளம் அதிகம். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

ரயில் வழித்தடங்களில் இந்த ரயிலுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், பிற ரயில்கள் போன்று இல்லாமல், தாமதம் தவிர்க்கப்படுகிறது.
இந்த ரயில்களில் மூன்று விதமான வகுப்புகள் உள்ளன. முதல் வகுப்பில் இரண்டு படுக்கைகள் மற்றும் நான்கு படுக்கைகள் கொண்ட பூட்டிக் கொள்ளும் வசதி கொண்ட அறைகள் உண்டு.

2 டயர் ஏசி பெட்டியில் பக்கத்திற்கு தலா 2 படுக்கைகளும், பக்கவாட்டில் 2 படுக்கைகளும் திரைசீலை வசதியுடன் இருக்கின்றன. மூன்றடுக்கு ஏசி பெட்டியில் பக்கத்திற்கு தலா 3 படுக்கைகளும், பக்கவாட்டில் 2 படுக்கைகளும் உள்ளன.

தற்சமயம் 23 ஜதை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மட்டும் தலா 2 ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ராஜ்தானி ரயிலும் புறப்படுவதற்கு முன் பல மணிநேரம் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் சக்திவாய்ந்த எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எஞ்சின்கள் பலவற்றில் குளிர்சாதன வசதியும் செய்து தரப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் எஞ்சினும் தினசரி பராமரிப்பு பணிகள் செய்த பின்னரே, ரயிலுடன் இணைக்கப்படும்.
இதர சுவாரஸ்யச் செய்திகள்:


Click it and Unblock the Notifications








