பதக்க நாயகி சாக்ஷிக்கு தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்த ஆனந்த் மஹிந்திரா!
ஒலிம்பிக்கில் மல்யுத்தத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நாட்டின் மானத்தை காப்பாற்றிய வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பில்லியன் இந்தியர்களின் பதக்க தாகத்தை தீர்த்த சாக்ஷி மாலிக்கிற்கு மஹிந்திரா தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்துள்ளார்.
இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்புக்கு ஏராளமானோர் பாராட்டுக்களையும், நன்றியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஏமாற்றம்
பல துறைகளில் முன்னிலை வகித்து வரும் இந்தியா ஒலிம்பிக்கில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை நாடுகளில் ஒன்றான இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்தை கூட பெறாதது பெரும் ஏமாற்றத்தை தந்தது.

வெண்கல பதக்கம்
இந்த ஏமாற்றத்தை போக்கும் விதத்தில், ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கத்தை வென்றார். ஒரு பதக்கம் கூட பெறும் வாய்ப்பில்லை என்று சலித்து போன ஒட்டுமொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

குவியும் பரிசுகள்
இந்தநிலையில், ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் இந்தியாவிற்கு கணக்கை துவங்கி வைத்திருக்கும் சாக்ஷி மாலிக்கிற்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. அவருக்கு ரயில்வே நிர்வாகம் பணி உயர்வையும் அறிவித்துள்ளது. இந்தநிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சாக்ஷி மாலிக்கிற்கு மஹிந்திரா தார் எஸ்யூவியை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஏன் தார் எஸ்யூவி?
அதிக மனவலிமையும், உடல் வலிமையும் தேவைப்படும் மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் திறமையாக போராடி, இறுதியில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோன்றதொரு வலிமையான எஸ்யூவி மாடலான தார் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதியே, அவர் இந்த பரிசை அறிவித்துள்ளார்.

கஸ்டமைஸ் மாடல்
தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தார் எஸ்யூவியில் அவருக்கு பிடித்தமான வண்ணத்தை கேட்டறிந்து வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான விவேக் நாயரை அறிவுறுத்தியிருக்கிறார். அத்துடன், அந்த தார் எஸ்யூவியை சாக்ஷி மாலிக் விரும்பும்படி கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து தருமாறும் கூறியிருக்கிறார்.

பொருத்தம்...
ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற இந்தியாவின் தலைசிறந்த எஸ்யூவி மாடலாக மஹிந்திரா தார் விளங்கி வருகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பம்பர்கள், கிளியர் லென்ஸ் ஹெட்லைட்டுகள், பக்கவாட்டிற்கான கூடுதல் ஃபுட்ஸ்டெப் உள்ளிட்ட பல மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இன்டீரியர்
உட்புறத்தில் இரட்டை வண்ண டேஷ்போர்டு, புதிய கியர் லிவர் அமைப்பு, 2 டின் ஆடியோ சிஸ்டம் என்று பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

எஞ்சின்
மஹிந்திரா தார் எஸ்யூவியில் 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 2.7 லிட்டர் CRDe டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் பரிசாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வண்ணங்கள்
டைமண்ட் ஒயிட், ராக்கி பேஜ், மிஸ்ட் சில்வர், ரெட் ரேஜ், ஆர்டிக் ஒயிட், சாம்பெயின், சன்னி பேஜ் மற்றும் ஃபியரி பிளாக் ஆகிய 8 வண்ணங்களில் கிடைக்கிறது. இதில், சாக்ஷி பிடித்த வண்ணத்தை தேர்வ செய்து வழங்க தனது நிறுவன அதிகாரியிடம் ஆனந்த் மஹிந்திரா அறிவுறுத்தியிருக்கிறார்.

விலை மதிப்பு
டாப் வேரியண்ட் மாடல்தான் பரிசாக கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் ரூ.8.89 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை மதிப்பு கொண்டது. வரி மற்றும் கஸ்டமைசேஷன் செலவு உட்பட ரூ.10 லட்சம் மதிப்புடையதாக இருக்கும்.

பதக்க வாய்ப்பு
ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். எனவே, இந்தியாவுக்கு தங்கப் பதக்க வாய்ப்பும் பிரகாசமாகியிருக்கிறது.

தீபாவுக்கும் பாராட்டுகள்
இதேபோன்று, முதல்முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியா பங்கேற்றதுடன், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நான்காம் இடத்தை பிடித்து அசத்தினா். அவரது திறமையும் இந்தளவு மதிக்கப்பட வேண்டியது, பாராட்டப் பட வேண்டியதே.

பாராட்டுகள்...
எக்ஸ்ரே எடுக்கும் பணியாளர் தலைமையிலான மருத்துவக் குழு, அரசியல் தலையீடுகள், போதிய கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு, ஸ்பான்சர் இல்லாத சூழலில், ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெயரையும் இடம்பெறச் செய்த ஒவ்வொரு போட்டியாளர்களும் பாராட்டப்படவேண்டியவர்களே... !!


Click it and Unblock the Notifications








