பிஎம்டபிள்யூ ஐ8 காரை வாங்கிய ஆஸ்திரேலிய போலீசார்!
பிஎம்டபிள்யூ ஐ8 காரை வாங்கியிருக்கின்றனர் ஆஸ்திரேலிய போலீசார். இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த ஆண்டு விலை உயர்ந்த கார்களை துபாய் போலீசார் வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் அனைத்து முன்னணி பிராண்டுகளின் விலை உயர்ந்த கார்களை அவர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அதே பாணியில் தற்போது ஆஸ்திரேலிய போலீசார் பிஎம்டபிள்யூ ஐ8 காரை வாங்கி உள்ளனர். இதுபற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ரோஸ் பே லோக்கல் ஏரியா கமாண்ட் பகுதியில் இந்த கார் பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால், இது கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட மாட்டாது.

மாற்றாக, மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கும், மக்களுக்கான சேவை மற்றும் பிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த கார் பயன்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், காரில் சைரன் மற்றும் விளக்குகள் போன்றவை இல்லை.

அதேநேரத்தில், பக்கவாட்டில் வெள்ளை- நீல வண்ண கொடி போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது. கூரை விளிம்புகளில் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கூரை மீது கருப்பு வண்ணமும், அதில் சிட்னி போலீசாரின் சின்னமும் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த, அதிக வரவேற்பை பெற்ற ஹைபிரிட் எரிபொருள் வகை கார் மாடலாக இது பெருமை பெறுகிறது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 357 பிஎச்பி பவரை அளிக்கும்.

ஹைபிரிட் வகை கார்களுக்கான மைலேஜ் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என்று பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை பறக்கும்.

இந்த காரில் ஸ்மார்ட் சாவி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், சாட்டிலைட் நேவிகேஷன் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








