எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தினால் கூடுதல் வரி!! இந்தியாவில் இல்லை... எந்த நாட்டில் தெரியுமா?
எரிபொருள் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் பேட்டரி வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.

இந்தியாவில் இந்த மாற்றம் மிகவும் குறைவான வேகத்தில் தான் நடைபெற்று வருகிறது என்றாலும், வெளிநாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நமது அண்டை நாடான சீனா அடுத்த 10- 15 வருடங்களில் முழுக்க முழுக்க மின்சார போக்குவரத்தை கொண்ட நாடாக மாறவுள்ளது. நடைபெற்றுவரும் ஷாங்காய் மோட்டார் கண்காட்சி இதற்கு சான்றாகும்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் மின்சார வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்களின் மீது கூடுதல் வரியை விதிக்க விக்டோரியா மாகாண அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதன்படி எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருவோர், காரின் பதிப்பை புதுப்பிக்கும் போது அந்த வாகனத்தில் பயணம் செய்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2.5 செண்ட்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

2.5 செண்ட் என்பது இந்திய ரூபாயில் மதிப்பில் வெறும் 1.78 ரூபாய் தான் என்றாலும், மொத்தமாக கணக்கிடும்போது அதிகமாகவே இருக்கும். அதாவது ஒருவர் தனது எலக்ட்ரிக் காரில் 10,000 ஆயிரம் கிமீ பயணித்து இருந்தால் அவர் தனது காரின் புதுப்பித்தலின் போது 18 ஆயிரம் ரூபாய் வரையில் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆஸ்திரேலியாவில் சராசரியாக ஒவ்வொரு காரும் வருடத்திற்கு 13,000ல் இருந்து 14,000 கிமீ வரையில் இயக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. எலக்ட்ரிக் வாகனம் இயங்கியுள்ள தூரத்தை உரிமையாளர் தான் கவனமாக பராமரிக்க வேண்டுமாம்.

இல்லையென்றால் அதற்கும் சேர்த்து அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் விக்டோரியா மாகாண அரசு வழக்கமான எரிபொருள் வாகனங்களுக்கு இத்தகைய வரியை விதிக்க போவதில்லை. இதனால் அத்தகைய கார்களின் உரிமையாளர்கள் வாகன இயக்கத்தின் தூரத்தை கணக்கிட வேண்டிய கட்டாயம் ஏற்படாது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அத்தகைய சலுகைகள் எதுவும் விக்டோரியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதில்லை.

அவ்வாறு எதாவது சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலாவது இந்த கூடுதல் வரியை சமநிலைப்படுத்தும், ஆனால் அவ்வாறு தான் எதுவும் இல்லையே. இந்த வரி திட்டத்தை ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன் என விக்டோரியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துவரும் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

மேலும், மெல்போர்னை சேர்ந்த செய்திதாள் ஒன்றில், ‘மோசமான மின்சார வாகன கொள்கை' என்ற தலைப்பில் விக்டோரியா அரசாங்கத்தின் இந்த கூடுதல் வரி திட்டத்தை பற்றி கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. இதனாலேயே இந்த விஷயம் மொத்த ஆஸ்திரேலியாவிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications








