எமன் மேல இருந்த பயமே போச்சுயா.. போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த மண்ணுலகம் வந்த விநாயகர்
போலீசார் சார்பில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில், விநாயகர் போன்று வேடம் தரித்தவர்கள் பங்கேற்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போலீசார் சார்பில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில், விநாயகர் போன்று வேடம் தரித்தவர்கள் பங்கேற்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்ப விபத்துக்களும் அதிகரிக்காமல் இல்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான உயிர்களை, விபத்துக்கள் காவு வாங்கி கொண்டுள்ளன.

இந்திய அளவில் அதிக விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டில் மொத்தம் 65,562 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 16,157 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எனவே விபத்துக்களையும், விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காவல் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது உள்ளிட்ட காரணங்களால்தான், அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே காவல் துறை, போக்குவரத்து துறை உள்பட பல்வேறு அரசு துறைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், பாதுகாப்பாக வாகனம் இயக்குவது தொடர்பாக, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பேரணி, கருத்தரங்கு, தெரு நாடகம், துண்டு பிரசுரம் வினியோகம் செய்தல் என பல்வேறு வழிகளில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 7 நாட்களுக்கு நடைபெறும் இந்த சாலை பாதுகாப்பு வாரத்தில், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளில், எமன் போன்று வேடமணிந்தவர்கள், கலந்து கொள்வது வழக்கம். எமதர்மராஜா கையில் வைத்திருக்கும் பாச கயிற்றையும் அவர்கள் வைத்திருப்பதை கண்டிருக்க முடியும்.

சாலை விதிகளை மீறினால், எமதர்மராஜா உயிரை பறித்து விடுவார் என்ற கருத்து, இதன்மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளில், எமன் போன்று வேடம் அணிந்தவர்கள் பங்கேற்றதை கண்டிருக்க முடியும்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெரு நகர போலீசாரும், சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும், எமன் போன்று வேடமணிந்தவர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை, பெங்களூரு போலீசார் தற்போது செயல்படுத்தி வருகின்றனர். மண்ணுலகில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பணியில், தற்போது விநாயகரும் களமிறங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

அதாவது பெங்களூரு பெரு நகர போலீசார் தற்போது ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில், விநாயகர் போன்று வேடம் தரித்தவர்களும் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் உள்பட அனைவரின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது.

வழக்கமாக எமன் போன்ற வேடமணிந்தவர்களின் கைகளில் உள்ள பதாகைகளில், ''நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், எமன் உங்களின் உயிரை பறித்து விடுவார். எனவே போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள். இதன்மூலம் உங்களின் உயிரையும், மற்றவர்களின் உயிரையும் காப்பாற்றுங்கள்'' என எழுதப்பட்டிருக்கும்.

அதே சமயம் தற்போது விநாயகர் போன்று வேடமணிந்தவர்களின் கைகளில் உள்ள பதாகைகளில், ''ஹெல்மெட் அணிந்து உங்கள் தலையை பாதுகாத்து கொள்ளுங்கள். அல்லது வாழ்க்கை முடிவை சந்திக்க வேண்டியதிருக்கும்'' என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








