பாரீஸில் குடுமிப்பிடி ஆரம்பம்... புதிய ட்ரீம்லைனர் அறிமுகம்!
பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் துவங்கியிருக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில் உலகிலுள்ள அனைத்து விமான தயாரிப்பு நிறுவனங்களும், தங்களது புதிய தயாரிப்பையும், புதிய தொழில்நுட்பங்களையும் போட்டி போட்டிக் கொண்டு அறிமுகம் செய்வது வழக்கம். இதில், அமெரிக்காவை சேர்ந்த போயிங் மற்றும் பிரான்சை சேர்ந்த ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையில் குடுமிப்பிடி சண்டை வராததுதான் பாக்கியாக இருக்கும்.
அந்த வகையில், கடந்த வாரம் போயிங் ட்ரீம்லைனருக்கு போட்டியாக புதிய ஏ350 விமானத்தை வெற்றிகரமாக பறக்கவிட்டு காலரை தூக்கிவிட்டுக் கொண்டது. இந்த நிலையில், இருப்பு கொள்ளாமல் தவித்த போயிங் தற்போது தனது 787 வரிசையில் மிக நீளமான மற்றும் மூன்றாவது ட்ரீம்லைனர் விமானத்தை பாரீஸ் விமான கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2017ல் வருகிறது
வரும் 2017ம் ஆண்டு இந்த விமானம் முதல்முறையாக பறக்கவிடப்படும் என போயிங் தெரிவித்துள்ளது.

இருக்கை வசதி
இந்த விமானத்தில் 300 முதல் 330 பேர் வரை பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும்.

பயணிகளுக்கான வசதி
பெரிய ஜன்னல் கண்ணாடிகள், விமானத்திற்குள் அதிக இடவசதி மற்றும் கேபினுக்குள் நவீன காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும்.

பயண தூரம்
நான் ஸ்டாப்பாக 10,000 நாட்டிக்கல் மைல் (18,500 கிமீ.,) தூரம் இந்த விமானம் இடை நில்லாமல் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

எரிபொருள் சிக்கனம்
விமான போக்குவரத்து துறையிலேயே அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இந்த விமானம் இருக்கும் என போயிங் தெரிவித்துள்ளது. இதனால், இயக்குதல் செலவு கணிசமாக குறையும்.

அதற்குள் ஆர்டர்
இந்த புதிய விமானத்தை அறிவித்த கையோடு, உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடேட் கான்டினென்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 6 ட்ரீம்லைனர் 787-10 விமானங்களை டெலிவிரி கொடுப்பதற்கான ஆர்டரை போயிங் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








