உலகிலேயே முதல்முறையாக 3 டன் ஏவுகணையை போர் விமானத்தில் இணைக்கும் இந்தியா!!
உலகிலேயே முதல்முறையாக போர் விமானத்தில் 3 டன் எடையுடைய ஏவுகணையை இணைக்கும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது. இதன்மூலம், வான் வழித் தாக்குதலில் அதிசக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவின் கை மேலும் ஓங்குகிறது.
இந்திய- ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான 3 டன் எடையுடைய பிரம்மோஸ் ஏவுகணையை சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில், இந்தியா இணைக்க இருக்கிறது. இதன்மூலமாக, நிலம், நீர், ஆகாயம் என மூன்று நிலைகளிலும் வைத்து செலுத்தக்கூடிய சிறப்பம்சத்தை பிரம்மோஸ் ஏவுகணை பெறுகிறது. இந்திய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய சிறப்பு
நிலம், நீர், ஆகாயத்திலிருந்து ஏவ முடியும். கடலுக்கடியில் இருந்தும் நீர் மூழ்கி போர்க்கப்பபல்கள் மூலமாகவும் ஏவ முடியும். இதற்கான, பிரத்யேக ஏவுதள கருவிகள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

பயன்பாடு
தற்போது நம் நாட்டு தரைப்படை மற்றும் கடற்படையில் பிரம்மோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டு, சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் ஐ.என்.எஸ் கொச்சி போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது விமானப்படையிலும் சேர்க்கப்பட உள்ளது.

விமானத்தில் மாறுதல்கள்
ரஷ்யாவிடமிருந்து உரிமம் பெற்று இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் அசெம்பிள் செய்யப்படும் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில்தான் பிரம்மோஸ் ஏவுகணை பொருத்தப்பட உள்ளது. இதற்காக, அந்த விமானத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு சோதனைகளுக்காக இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள எச்ஏஎல் நிறுவனம் இந்த விமானத்தை தயாரித்து வழங்கியிருக்கிறது.
Photo Credit: Brahmos Aerospace

குறைந்த தூர வகை
8.4 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை குறைந்த தூரத்திற்கான இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும்.

மற்றொரு சிறப்பு
இரண்டு நிலை திட எரிபொருள் கட்டமைப்பு கொண்டது. 15 கிமீ உயரத்தில் பறக்கவும் முடியும். அதேபோன்று, மிக மிக தாழ்வாக 10 மீட்டர் உயரத்தில் பறக்கவும் முடியும்.

அணு ஆயுதங்கள்....
பிரம்மோஸ் ஏவுகணையில் 300 கிலோ எடையுடைய அணு ஆயுதங்களை வைத்து செலுத்த முடியும். தவிர, சாதாரண வெடிகுண்டுகளையும் வைத்து செலுத்த முடியும்.

சூப்பர்சானிக் ஏவுகணை
ஒலியைவிட அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகமை. மேக் 2.8 என்ற அலகால் குறிப்பிடப்படும் வேகத்தை கொண்டது. அதாவது, மணிக்கு 3,457 கிமீ வேகத்தில் பறந்து செல்லும். மேலும், மேக் 6.0 [மணிக்கு 7,408கிமீ வேகம்]என்ற வேகத்தில் ஹைப்பர் சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கில்லாடி
எதிரி நாட்டு ரேடார்களில் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சிக்காத வண்ணம் மிகவும் தாழ்வாக பறந்து சென்று இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. எனவே, போர் என்று வரும்போது, பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.

சோதனைகள்
பிரம்மோஸ் ஏவுகணையின் டம்மி எனப்படும் மாதிரி வடிவ ஏவுகணையை சுகோய் 30 எம்கேஐ விமானத்தில் பொருத்தி விரைவில் சோதனைகள் துவங்கப்பட உள்ளன. முதல் இரண்டு கட்டங்களில் டம்மிதான் பொருத்தப்பட்டு சோதனைகள் செய்யப்படும். மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களில் உண்மையான பிரம்மோஸ் ஏவுகணையை பொருத்தி இலக்குகள் மீது செலுத்தி சோதனைகள் நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி
இந்திய- ரஷ்ய கூட்டணியின் கீழ் செயல்படும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பிரம்மோஸ் ஏவுகணையை தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை சேர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது. மேலும், பிரம்மோஸ் ஏவுகணை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

01.உலகின் டாப்- 10 விமானப்படைகளில் இந்தியாவின் பலம் என்ன?
02. உலகின் அதிவேக விமானங்கள்...
03. இந்தியா வாங்கும் ரஃபேல் போர் விமானங்கள்

01. டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்
02. டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்


Click it and Unblock the Notifications








