மைக்ரோசாப்ட்-பிரிட்ஜெஸ்டோன் இணைவில் உருவாகும் டயருக்கான தொழில்நுட்பம்! இது எப்போ விற்பனைக்கு வரும்?
பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான பிரிட்ஜெஸ்டோன், மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்டுடன் இணைந்து டயருக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன இயக்கத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான அம்சங்களில் டயர்களும் ஒன்று. இவையில்லை என்றால் வாகனத்தின் இயக்கமே கேள்வி குறிதான். இது பைக், கார், லாரி, பேருந்து என எந்த வாகனமாக இருந்தாலும் பொருந்தும். எனவேதான், வாகனத்துறை வல்லுநர்கள் பலர், எஞ்ஜினுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டயர்களுக்கும் கொடுக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

ஓர் தரமான டயர், நல்ல இழுவை திறன் முதல் அதிக மைலேஜ் வழங்குவது வரை பல நிலைகளில் உதவி புரிகின்றது. எனவேதான், டயரில் தேவையான காற்று இருக்கிறதா மற்றும் குறிப்பிட்ட கிமீ பயணங்களுக்கு பின்னர் உடனடியாக டயர்களை மாற்ற வேண்டும் என்ற அறிவுரைகளை அவர்கள் முன் வைக்கின்றனர்.

இந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த டயரில் அத்தி பூ பூத்தார் போல் அவ்வப்போது பரிணாம வளர்ச்சியும் கொண்டு வரப்படுகின்றது. முன்னதாக ட்யூப்புடன் இணைந்து பயன்பட்டு வந்த டயர்கள் தற்போது ட்யூப்லெஸ் திறனில் கிடைத்து வருகின்றன. விரைவில் காற்று தேவைப்படாத மற்றும் பஞ்சரே ஆகாத டயர்களாகவும் அவை சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில், நாம் எதிர்பார்க்காத ஓர் தொழில்நுட்பத்தை பிரிட்ஜெஸ்டோன் மற்றும் மைக்ரோஷாப்ட் ஆகிய இரு நிறுவனம் இணைந்து உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, பள்ளம் மற்றும் மேடுகளால் டயர் சந்திக்கும் தாக்கத்தை மானிட்டரிங் செய்கின்ற கருவியை உருவாக்கி வருகின்றன.

இந்த கருவி மூலம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சாலைகளைக் கண்டறிய முடியும். எனவே, அம்மாதிரியான சாலையில் செல்லும்போது காரை மெதுவாக இயக்கும்படி அந்த தொழில்நுட்பம் எச்சரிக்கை வழங்கும். இத்துடன், டயரில் இருக்கும் பிரஷ்ஷர் போன்றவை பற்றிய தகவலையும் அது வழங்கும்.

இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு 'டயர் டேமேஜ் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற பெயரை அந்நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இது சென்சார் மூலம் இயங்கும் கருவியாகும். இந்த சென்சார் சாலையில் இருக்கும் பள்ளம், மேடு, பொத்தல்கள் மற்றும் குப்பைகள் என அனைத்தையும் அறிந்து, அவை எம்மாதிரியான தாக்கத்தை டயருக்கு வழங்குகின்றன என்ற தரவுகளை உடனுக்குடன் வழங்கும்.

இதுமட்டுமின்றி டயரின் சுற்றுப்புறம் சரியாக ரிம்முடன் அமர்ந்திருக்கின்றதா என்பதையும் இந்த தொழில்நுட்பம் கண்கானிக்கும். ஒரு வேலை காற்று குறைபாடின் காரணமாக டயர் நெகிழ நேர்ந்தால் அதுகுறித்த தகவலையும் இது வழங்கும். எனவே, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன்மூலம் அதிக பாதுகாப்பை பெற முடியும்.

தற்போது நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு டயர்களில் ஏற்படும் கோளாறே முக்கிய காரணமாக உள்ளது. அதாவது நாட்டில் நடைபெறும் விபத்துகளில் 30 சதவீத விபத்துகள் டயரில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாகவே அரங்கேறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுமாதிரியான டயரை கண்கானிக்கும் கருவிகள் முக்கிய கண்டுபிடிப்பாகவே பார்க்கப்படுகின்றது.

எனவேதான், தற்போது பிரிட்ஜெஸ்டோன் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தை உருவாக்கி வருகின்றன.
தற்போது சந்தையில் விற்பனையில் பெரும்பாலான மாடர்ன் ரக கார்களில் டயர் பிரஷ்ஷர் மாணிட்டர் சிஸ்டம் நிறுவப்படுகின்றன. இவை டயருக்கு கிடைக்கும் அழுத்தம் மற்றும் காற்றின் அளவை மட்டுமே காண்பிக்கின்றன.
இந்த தகவலை வழங்க சற்று கூடுதல் நேரத்தை அவை எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற இடைவெளியை புதிய மாணிட்டரிங் சிஸ்டம் வழங்காது. மேலும், உடனுக்குடன் அது தகவலை வழங்கி ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். தற்போது உற்பத்தி பணியில் இருக்கும் இந்த அம்சம் விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








