விபத்தில் சிக்கியது புகாட்டி சிரோன் கார்...!!
உலகின் அதிவேக கார் மாடலான புகாட்டி சிரோன் கார் விபத்தில் சிக்கியது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் அதிவேக கார் மாடல் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் காரின் வழித்தோன்றலாக வந்த புதிய தலைமுறை மாடல் புகாட்டி சிரோன் கார். கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவின் மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மணிக்கு 261 கிமீ டாப் ஸ்பீடு என்ற கட்டுப்படுத்தப்பட்ட வேக நிர்ணயத்துடன் இந்த சூப்பர் கார் இந்திய மதிப்பில் ரூ.17.82 கோடி விலை மதிப்புடன் சந்தைக்கு வந்தது. இந்த நிலையில், இந்த மதிப்புமிக்க கார் ஒன்று விபத்தில் சிக்கிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சோதனை
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகாட்டி நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜெர்மனியின் வோல்ஸ்பர்க் நகரில் உள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஆலையில் அமைந்துள்ள சோதனை களத்தில் வைத்து இந்த கார் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

டிரைவரின் கவனக்குறைவு
அப்போது, அந்த காரை சோதனை செய்த டெஸ்ட் டிரைவர் கவனக்குறைவால் கார் பள்ளத்தில் பாய்ந்தது. இதில், காரின் முன்பகுதியில் சேதமடைந்தது. பின்னர், அந்த கார் சிறிய கிரேன் வாகன உதவியுடன் மீட்கப்பட்டது.

அறிக்கை
இந்த சம்பவத்தை புகாட்டி நிறுவனமும் ஒப்புக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில்," டெஸ்ட் டிரைவரின் கவனக் குறைவால் துரதிருஷ்டவசமாக கார் விபத்தில் சிக்கியது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அச்சம் வேண்டாம்
மேலும், உற்பத்தி இலக்கு வைக்கப்பட்டிருக்கும் 500 கார்களில் இந்த கார் சேராது. இது சோதனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட புரோட்டோடைப் மாடலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்கள் பீதி கொள்ள வேண்டாம்.

விளக்கம்
ஏனெனில், பல கோடிகள் போட்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை தரலாம். அதற்காகவே இந்த விபரங்களை புகாட்டி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








