வைரலாகும் வீடியோ... விலை உயர்ந்த பென்ஸ் காரை பறவைக்கு விட்டு கொடுத்த பிரபல மனிதர்... யார் தெரியுமா?
பிரபல மனிதர் ஒருவர் விலை உயர்ந்த பென்ஸ் காரை பறவைக்கு விட்டு கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்கள் நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், பூனை போன்ற விலங்குகளும், சிட்டுக்குருவி போன்ற பறவைகளும், அதனை தங்களின் இருப்பிடமாக மாற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

எனவே வாகன பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இப்படி பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் பறவைகள் கூடு கட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் ஸ்கூட்டரில் பறவை கூடு கட்டிய தகவல் வெளியானது.

பறவை கூடு கட்டியதால், சுமார் 3 மாதங்களாக அவர் ஸ்கூட்டரை அப்படியே நிறுத்தி வைத்துள்ளார். இந்த வரிசையில் உலக நாடுகளின் மக்களுக்கு நன்கு அறிமுகமான மனிதர் ஒருவரும், பறவை கூடு கட்டியதால், தனது காரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. துபாய் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்தான் அந்த மனிதர்.

இவர் துபாய் நிர்வாக குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், வாகனங்களை பயன்படுத்துவதை துபாய் பட்டத்து இளவரசர் குறைத்து கொண்டுள்ளார். இதனால் அவர் அடிக்கடி பயன்படுத்தும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) கார் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த காரில் தற்போது பறவை ஒன்று கூடு கட்டியுள்ளது. துபாயில் உள்ள பட்டத்து இளவரசரின் வீட்டு வாகன நிறுத்துமிடத்தில் இந்த கார் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பறவை கூடு கட்டியிருப்பதால், அந்த காருக்கு அருகே கூட துபாய் பட்டத்து இளவரசர் செல்வதில்லை. மேலும் வேறு யாரும் அந்த காருக்கு அருகில் செல்லக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பறவை கூடு கட்டியிருக்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. யாரும் அருகே சென்று பறவைக்கு தொந்தரவை ஏற்படுத்த கூடாது என்பதற்காக, அந்த காரை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை துபாய் பட்டத்து இளவரசர் அமைத்துள்ளார். அத்துடன் காரில் பறவை கூடு கட்டியிருக்கும் காணொளியை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பறவை பயந்து விடக்கூடாது என்பதற்காக தொலைவில் இருந்துதான் இந்த காணொளியை துபாய் பட்டத்து இளவரசர் எடுத்துள்ளார். காரின் பானெட்டில் பறவை கூடு கட்டியிருப்பதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. அவர் அதனை நமக்கு 'ஜூம்' செய்து காட்டியுள்ளார். தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம்.
இதற்காக துபாய் பட்டத்து இளவரசருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன. துபாய் பட்டத்து இளவரசர் விலங்குகள் மற்றும் பறவைகளை அதிகமாக நேசிக்க கூடியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு தற்போதைய சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. அவர் பல்வேறு விலங்குளை பாசமாக வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்க விஷயம்.


Click it and Unblock the Notifications








