மார்க்கெட் இழந்த எஃப்-16 போர் விமானங்களை இந்தியாவின் தலையில் கட்டுகிறதா லாக்ஹீட் மார்ட்டின்?
நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 போர் விமானங்களை இந்தியா வாங்குவது குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த தசாப்தத்தில் வெளிநாடுகளில் மார்க்கெட் இழந்த அல்லது அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஓடி விட்ட கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் ஆயுளையும், முதலீட்டையும் சற்று தக்க வைத்துக் கொள்வது கார் நிறுவனங்களின் யுக்தியாக இருந்து வந்தது.

அதே பாணியில் அமெரிக்காவில் மார்க்கெட் இழந்த லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 போர் விமானம் இந்தியாவின் தலையில் கட்டப்படுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

ஆம், பாரிஸ் ஏர் ஷோவில் லாக்ஹீட் எஃப்-16 போர் விமானங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட லாக்ஹீட் எஃப்-16 போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு டெலிவிரி வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சாப் நிறுவனமும் தனது கிரிபென் போர் விமானத்தை இந்தியாவிடம் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற கடுமையாக முயற்சித்தது.

ஆனால், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் வெற்றி பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் இது. இந்த நிலையில்தான் லாக்ஹீட் மார்ட்டினுடன் செய்து கொள்ளப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

1978 முதல் அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் இந்த லாக்ஹீட் எஃப்-16 போர் விமானத்திற்கு தற்போது ஆர்டர்கள் இல்லை. எனவே, இந்த விமானத்தை இந்தியாவிடம் தள்ளுவதற்கு லாகக்ஹீட் பெரு முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளதாக கருதப்படுகிறது.

பாதுகாப்புத் துறை வல்லுனர் பிரம்ம செலானி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் எஃப்-16 விமானங்கள் உற்பத்தி செய்து வெளிவரும்போது அவை மிகவும் பழமையானதாக இருக்கும். இந்த விமானங்களை லாக்ஹீட் மார்ட்டின் இந்தியாவில் கொண்டு தள்ளுவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், லாக்ஹீட் விமானங்கள் தற்போது அதிகபட்ச அளவில் நவீன மயமாக்கப்பட்டுவிட்டன. தற்காலத்திற்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்களை இதற்கு மேல் புகுத்த முடியாது என்ற விமர்சனமும் முன்வைக்கப்ப்டடு இருக்கிறது.

இதுகுறித்து லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் பிபிசிக்கு அனுப்பி இருக்கும் பதிலில், " இன்றளவும் அமெரிக்க விமானப்படையின் முதுகெலும்பாக எஃப்-16 விமானங்கள் இருக்கின்றன. மேலும், தொடர்ந்து எஃப்-16 போர் விமானங்களை அமெரிக்க விமானப்படை பயன்படுத்த உள்ளது.

அமெரிக்க விமானப்படையில் உள்ள 841 எஃப்-16 விமானங்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது," என்று தெரிவித்துள்ளது.

இதுவரை இங்கிலாந்து மற்றும் ரஷ்ய போர் விமானங்களை பயன்படுத்தி வந்த இந்தியா தற்போது அமெரிக்க தயாரிப்புகள் பக்கம் திரும்பி இருக்கிறது. அமெரிக்கா தவிர்த்து, ஜப்பான், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்த போர் விமானத்தை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் உற்பத்தி படு தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரத்தில், விமானப் படையை வலுவாக்க உடனடி தேவை கருதி இந்த விமானத்தை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








