10 வருடங்களுக்கு மேல் டீசல் வாகனங்களை பயன்படுத்த முடியாது!! டெல்லியில் அமலுக்குவரும் புதிய உத்தரவு!
வருகிற 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல், ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு 10 வருடங்களை நிறைவு செய்யும் அனைத்து டீசல் வாகனங்களின் பதிவையும் ரத்துச்செய்ய உள்ளதாக டெல்லி அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

2021ஆம் ஆண்டில் இருந்து 2022க்குள் நுழையவுள்ளோம். ஆண்டுகள் உருண்டோட புவி வெப்பமயமாதல் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இதனாலேயே பனி உருகுதல், கடல் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்தல் போன்ற மாற்றங்கள் நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இது எதிர்பாராத இயற்கை சீற்றங்களுக்கு வழி வகுப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது முடியாத காரியம் என்றாலும், குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா உள்பட பல உலக நாடுகளில் 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே ஈடுப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளில், வாகனங்கள் & தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் புகையின் அளவை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவையும் முக்கியமானவைகளாக அடங்குகின்றன.

இதன் எதிரொலியாக பிஎஸ்6, யூரோ 5 போன்ற வாகனங்களின் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் சமீப ஆண்டுகளாக பெரும்பான்மையான ஆண்டுகளில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இப்போது, பயன்பாட்டில் 10 வருடங்களை நிறைவு செய்யும் டீசல் வாகனங்களின் வாகனப்பதிவை நீக்க உள்ளதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்திய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) உத்தரவுகளுக்கு இணங்க இந்த நடவடிக்கையை டெல்லி அரசாங்கம் எடுத்துள்ளது. வருகிற 2022ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து அமலுக்கு வரவுள்ள இந்த நடவடிக்கையின்படி பதிவு நீக்கம் செய்யப்பட உள்ள டீசல் வாகனங்களுக்கு என்ஓசி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழின் மூலம் இத்தகைய டீசல் வாகனங்களை மற்ற மாநிலங்களில் மீண்டும் பதிவு செய்ய முடியும்.

இருப்பினும், 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் டீசல் வாகனங்களுக்கு என்ஓசி வழங்கப்படாது என டெல்லி போக்குவரத்து துறை தெரித்துள்ளது. முன்னதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி- என்சிஆர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்களை பதிவு செய்வதற்கும் இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்தது.

நாட்டின் தேசிய தலைநகரில் முக்கியமான என்சிஆர் பகுதியில் வாகன மாசு அளவை குறைக்கும் பொருட்டு 2016 ஜூலை மாதத்தில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டது. என்ஜிடி-யின் இந்த உத்தரவிற்கு இணங்க, தில்லியில் தகுதியான அனைத்து டீசல் வாகனங்களின் பதிவுகள் அடுத்த ஆண்டு (2022) ஜன.1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று டெல்லி போக்குவரத்து துறையின் அறிக்கை கூறுகிறது.

அதாவது பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு வெளிவந்து கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகே இத்தகைய அறிக்கை தற்போது அதிகாரப்பூர்வ டெல்லி அரசாங்கத்தில் இருந்து வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே கூறியதுபோல், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் என்ஓசி வழங்கலாம் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இத்தகைய வாகனங்களை மறுபதிவு செய்ய தடைசெய்யப்பட்ட பகுதி என்று மற்ற மாநில அரசுகளால் அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு என்ஓசி வழங்கப்படாது என்ற நிபந்தனையும் உள்ளது. அதேநேரம், 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் டீசல் வாகனங்கள் & 15 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், அவற்றை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளதாக டெல்லி போக்குவரத்து துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி அரசு பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை இவி தொகுப்பு மூலம் மறுசீரமைக்க அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கையின் கீழ் பாதிக்கப்படும் வாகன உரிமையாளர்கள், டெல்லி போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் எம்பேனல் செய்யப்பட்ட மின்சார கருவிகளுடன் பழைய பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை மறுசீரமைத்து கொள்ளலாம்.

என்ஓசி வாங்க முடியாத அளவிற்கு மற்றும் எலக்ட்ரிக் வாகனமாக மாற்றிக்கொள்ள முடியாத அளவிற்கு பழுதான அல்லது சேதமடைந்த வாகனங்களை அழிப்பது மட்டுமே அவற்றின் உரிமையாளர்களுக்கு ஒரே வாய்ப்பாக இருக்கும். டெல்லி போக்குவரத்து துறை மற்றும் டெல்லி போக்குவரத்து போலீஸ் குழுக்கள் ஏற்கனவே இதுபோன்ற பழைய வாகனங்களை பறிமுதல் செய்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் ஸ்கிராப்பிங் செய்ய அனுப்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications








