சொகுசு கப்பல்களின் அழுக்குப் பக்கங்கள்!
மிதக்கும் சொர்க்கமாக வர்ணிக்கப்படும் சொகுசு கப்பல்களில் பயணிக்க வேண்டும் என்பது உயர்தட்டு மக்களின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள், வகை வகையான உணவுகள் என பயணிகளுக்கு ஒருங்கிணைந்த மிதக்கும் சொர்க்கமாகவே விளங்குவதால் உல்லாச கப்பல்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
இதுபோன்ற எண்ணற்ற வசதிகளுடன் வியக்க வைக்கும் உல்லாச கப்பல்களில், பயணிக்க வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கும் கனவாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை. முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தை போன்று பிரம்மையை ஏற்படுத்தும் இந்த சொகுசு கப்பல் தொழிலில் ஏராளமான முறைகேடுகளும், பயணிகளுக்கு மோசமான அனுபவங்களும் இல்லாமல் இல்லை. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

நம்மூரில் மினி பஸ், லாரி போன்றவற்றில் டீசலுடன் மண்ணெண்ணெய் சேர்த்து இயக்குவதை பார்த்திருப்பீர்கள். இது எஞ்சினுக்கு கெடுதல் என்றாலும் விலை குறைவு என்ற காரணத்திற்காக இதுபோன்று செய்வதை பார்க்கலாம். அதேபோன்று, பல ஆயிரம் பயணிகளுடன் பயணிக்கும் உல்லாச கப்பல்களுக்கு பல டன் எரிபொருள் தேவைப்படும்.

இங்கு டீசலுக்கு பதிலாக மலிவு விலையில் கிடைக்கும் பங்கர் ஃப்யூவல் என்ற தார் போன்ற எரிபொருளை பயன்படுத்துகின்றனர். தார் போன்று இருக்கும் இந்த பங்கர் எரிபொருளை வைத்து இயக்கும்போது சாதாரண டீசலைவிட 4,000 முதல் 5,000 மடங்கு அதிக அளவில் சல்ஃபர் உள்ளிட்ட நச்சுப் பொருட்களை வெளிப்படுத்தும். இதுபோன்ற கப்பல்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டு வருகிறது.

சொகுசு கப்பல்களில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களால் அடிக்கடி பிரச்னை எழுகின்றன. குறிப்பாக, சரியாக பதப்படுத்தப்படாத உணவுகள், போதிய இடவசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே இடத்தில் குழுமி இருப்பது போன்ற சூழல் மற்றும் போதிய சுகாதார வசதிகளை பராமரிக்காத நிலையிலேயே ஏற்படுகின்றதாம். நோரோவைரஸ் என்று அழைக்கப்படும் இந்த கிருமியால் வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகிறது. சில சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் இதுபோன்ற தொற்றுநோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.

கப்பலில் பணியாற்றும் பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முறையான கல்வியையும், பயிற்சியையும் பெறாதவர்களாகவும் இருக்கின்றனராம். இந்த பொறுப்பும் ஏஜென்ட்டுகள் மூலமாக நடைபெறுவதால், நியமிக்கப்படும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தவறான சிகிச்சையை அளிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலருக்கு மருத்துவ கருவிகளை கூட கண்டிராத நிலையில், போலி சான்றிதழ் மூலமாகவும் இந்த பணிகளில் எளிதாக சேர்ந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

உல்லாச கப்பல்களில் வாரத்திற்கு 2.10 லட்சம் கேலன் வரை மனிதக் கழிவுகள் சேர்ந்துவிடுகிறதாம். அடுத்த துறைமுகத்தில் இந்த மனிதக் கழிவுகளை இறக்கி முறையாக அழிக்கப்படுவதாக நீங்கள் கருதினால் தவறு. பெரும்பாலான கப்பல்கள் நடுக்கடலில் செல்லும்போது மனிதக் கழிவுகளை கடலில் திறந்துவிட்டுவிடுகின்றனர். இதனை பிளாக் வாட்டர் என்று குறிப்பிடுகின்றனர். இதனால், கடலின் சுற்றுச்சூழலை கெடுப்பதில் இந்த உல்லாசக் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கிறதாம்.

கடுமையான சட்டத் திட்டங்கள் இல்லாததால், கப்பல்களில் பாலியல் கொடுமைகள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறதாம். தரையில் நடக்கும் பாலியல் கொடுமைகளை விட உல்லாச கப்பல்களில் 50 சதவீதம் கூடுதலாக நடக்கிறதாம். கப்பல்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்காக சிறை அறைகளும் கப்பலில் உண்டு. அடுத்த துறைமுகத்தில் போலீசாரிடம் ஒப்படைக்கும் வரை அந்த சிறையில்தான் குற்றச் செயல்கள் புரிந்தோரை அடைத்து வைக்கின்றனர்.

உல்லாச கப்பலில் வரும் முதியோரின் எண்ணிக்கை அதிகம். இதனால், உல்லாசக் கப்பல் பயணத்தின்போதே பலர் மரணமடைகின்றனர். அவர்களின் உடலை பதப்படுத்தி வைப்பதற்காக பிரத்யேக சவக்கிடங்கு உண்டு. ஒரேநேரத்தில், மூன்று உடல்களை பதப்படுத்தி வைக்க முடியும். சில கப்பல்களில் ஹெலிபேடுகள் மூலமாக இறந்தவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பல கப்பல்களில் பயண முன்பதிவை ரத்து செய்தால் கட்டணம் திருப்பி பெறுவதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில், கப்பல்களில் பயணத்தை ரத்து செய்யும் சட்டதிட்டங்கள் மிக மோசமானவை. பயண நாளிலிருந்து குறைந்தது 120 நாட்களுக்கு முன்னதாக ரத்து செய்தால் மட்டுமே பயணக்கட்டணத்தை திரும்ப பெற முடியும் என்பதால், பலர் பயணிக்காமலேயே தங்களது கட்டணத்தை தண்டம் அழ வேண்டிய நிலை இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட உல்லாச கப்பல்களுக்கு முறையான சட்டங்கள் இல்லை. இதனால், இந்த துறையில் பணிபுரியும் பல ஊழியர்கள் பணி பாதுகாப்பு, போதிய ஊதியம் இல்லாத நிலையிலேயே பணிபுரிகின்றனர். பணப்புழக்கம் நிறைந்த இந்த துறையில் பணியாற்றும் வளர்ந்த நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் மாதத்திற்கு 500 டாலருக்கும் குறைவான ஊதியத்தை பெறும் கொடுமைகளும் நடக்கிறது. பெரும்பாலானோர் பயணிகளை பொழுதுபோக்கு தரும் துறைகளில் பணியாற்றுகின்றனராம்.

அவர்கள் தங்கள் நாட்டின் சராசரி ஊதியத்தைவிட மிக சொற்ப சம்பளத்திற்கே பணியாற்றுகின்றனராம். பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் தருவதற்கு, பணியாளர்களை எடுத்து தரும் ஏஜென்ட்டுகளுக்கு கமிஷன் கொடுப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தரும் டிப்ஸைவிட சம்பளம் குறைவு என்பதுதான் வேதனை என்று பல பணியாளர்கள் கூறுகின்றனராம். ஊழியர்களுக்கு நிறைவான சம்பளம் கொடுக்கும் பெரிய நிறுவனங்கள் அதனை வாடிக்கையாளர்களின் பயண கட்டணத்தில் ஏற்றி சமாளித்துவிடுகின்றனர்.

ஓலா, உபேர் போன்றே, கூட்டம் அதிகரித்தால் உடனடியாக கட்டணத்தை தடாலடியாக உயர்த்தும் வழக்கமும் இந்த கப்பல் நிறுவனங்களிடம் உள்ளன. அவ்வப்போது உல்லாச கப்பல்களில் பயணிப்போருக்கு இது பெரும் சிரமத்தை தரும் விஷயம். கருப்புப் பண முதலைகள் சிலர் இந்த கப்பல்களையே வசிப்பிடமாகவும் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த திடீர் கட்டண உயர்வு பொருட்டாக இருக்காது. ஆனால், உண்மையாகவே குடும்பத்துடன் இந்த கப்பலில் பயணிக்க வரும் பயணிகளுக்கு இது அதிர்ச்சியை தரும் விஷயமாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








