ஜப்பானின் ஹயபுசா புல்லட் ரயிலின் சிறப்பம்சங்கள்!
நம் நாட்டில் பயணிகள் ரயில் சேவை துவங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஜப்பானிய அரசு மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் புல்லட் ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், இந்தியா வருவதற்கான வாய்ப்பு உள்ள ஜப்பானிய புல்லட் ரயிலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களையும் இங்கே காணலாம். 1964ம் ஆண்டு ஜப்பானில் ஷின்கன்சென் அதிவேக ரயில் சேவை துவங்கப்பட்டது. உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஷின்கன்சென் ரயில்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை.
இந்த நிலையில், ஷின்கன்சென் ரயிலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை இ-5 வரிசை ஷின்கன்சென் ரயில்கள் 2011ம் ஆண்டு முதல் சேவையை துவங்கியது. இதனை ஹயபுசா என்றும் அழைக்கின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கும், ஆமோரி நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ஹயபுசா அதிவேக ரயில்களின் அடிப்படையிலான புல்லட் ரயில் இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில், இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் ஜப்பானிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் அந்நாட்டு முதலீட்டு திட்டங்களுடன் நடந்து வருகின்றன. ஜப்பானில் இயக்கப்பட்டு வரும் புல்லட் ரயில்கள் பற்றிய சில தகவல்களை ஸ்லைடரில் தெரிந்துகொள்வோம்.

வேகக் கட்டுப்பாடு
புதிய தலைமுறை இ-5 வரிசை ஷின்கன்சென் ரயில்கள் சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சம் மணிக்கு 400கிமீ வேகம் வரை சென்றன. ஆனால், பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதற்காக மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நீளமான மூக்கு
புல்லட் ரயிலின் தோற்றதில் அதன் மூக்குப் பகுதி அனைவரையும் சிந்திக்க வைக்கும். முன்பகுதியில் 15 மீட்டர் நீளத்துக்கு அதன் மூக்கு நீட்டப்பட்டுள்ளது. குகை அல்லது பாதாள வழித்தடத்தில் அதிவேகத்தில் நுழையும்போது காற்றால் அதிக சப்தம் ஏற்படுவதையும், ரயிலின் வேகம் காற்றின் அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவும் இதன் மூக்குப் பகுதி நீட்டப்பட்டுள்ளது.

சிறப்பு நுட்பம் கொண்ட பெட்டிகள்
இ-5 புல்லட் ரயிலின் பெட்டிகள் அனைத்தும் பிரத்யேக காற்றுத் தடுப்பு தொழில்நுட்பத்தை கொண்டிருக்கின்றன. மேலும், தண்டவாளத்திலிருந்து வரும் சப்தம் மற்றும் அதிர்வுகள் பயணிகளுக்கு தெரியாதவகையில் சிறப்பு சப்த தடுப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒற்றை பான்டோகிராஃப்
எஞ்சினுக்கு மின்சார சப்ளை பெற்றுத் தரும் கொம்பு பொதுவாக இரட்டை கைகள் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த வகை புல்லட் ரயில்களில் ஒற்றை கை கொண்டதாக இருக்கிறது. தேவையற்ற சப்தத்தை தவிர்க்கும் வகையில் ஒற்றை கொம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்
இதில் எஃப்எஸ்ஏ எனப்படும் ஃபுல் ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் பாடி டில்ட்டிங் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிர்வுகளை முற்றிலும் குறைத்துவிடும். பாடி டில்ட்டிங் சிஸ்டம் என்பது வளைவுகளில் ரயில் திரும்பும்போது அதிக சமநிலையை கொடுக்கும் சிறப்பு அம்சம். வளைவுகளில் வேகத்தை குறைக்க வேண்டியிருக்காது.

வகுப்பு
ஒரு இ-5 ரயில் மொத்தம் 10 பெட்டிகளை கொண்டிருக்கும். மூன்று வகுப்புகள் கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது. கிரான் கிளாஸ் என்ற முதல் வகுப்பில் 18 இருக்கைகளும், கிரீன் கிளாஸ் என்ற இரண்டாம் வகுப்பில் 55 இருக்கைகளும், சாதாரண வகுப்பில் 658 இருக்கைகளும் இருக்கின்றன.

வசதிகள்
மிக சொகுசான லெதர் இருக்கை மற்றும் இருக்கையை எலக்ட்ரிக்கல் முறையில் முன்னே, பின்னே நகர்த்த முடியும். ஒரு பொத்தானை அழுத்தினால் இருக்கை பின்புறம் சாய்ந்துகொள்ளும் வசதி, புத்தகம் படிப்பதற்கான தனித்தனியான ரீடிங் லேம்ப், மடக்கி விரிக்கும் வசதியுடன் டிரே ஆகியவை உண்டு. லேப்டாப், மொபைல்போன் சார்ஜர், ஆர்ம் ரெஸ்ட் ஆகியவையும் இருக்கின்றன.

ரெஸ்ட் ரூம்
வீல் சேர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வசதியுடன் கூடிய ரெஸ்ட் ரூம் உள்ளது.

நெட்வொர்க்
ஜப்பானில், முதலில் 515.4 கிமீ தூரத்துக்கு இந்த அதிவேக ரயில்களுக்கான வழித்தடம் அமைக்கப்பட்டது. படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது 3,387.7 கிமீ தூரத்துக்கு அதிவேக ரயில்களுக்கான வழித்தடங்கள் ஜப்பானில் இருக்கின்றன.

விமானத்தைவிட சிறந்தது
பயணிகளின் பாதுகாப்பு, சொகுசு, கட்டணம் என அனைத்து விதங்களிலும் விமானத்தை விட இந்த அதிவேக புல்லட் ரயில்கள் இருப்பதாக பயணிகளும், ஜப்பானிய ரயில்வேயும் தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பு
இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான தொழில்நுட்பங்களை வழங்க ஜப்பான் ஒப்புதல் தெரிவித்து அதற்கான தீவிர ஆய்வுப் பணிகளையும் செய்து வருகிறது. சென்னை-பெங்களூர்-கோவை-திருவந்தபுரம், ஹவுரா-ஹால்தியா, ஹைதராபாத்-விஜயவாடா-சென்னை, டெல்லி-சண்டிகர்-அமிர்தசரஸ், புனே-மும்பை-ஆமதாபாத், டெல்லி-ஆக்ரா-லக்ணோ-அலகாபாத்-பாட்னா, டெல்லி-மும்பை ஆகிய வழித்தடங்களில் புல்லட் ரயிலை இயக்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும், பெரும் முதலீடுகளையும் வழங்குவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








