ஃபெராரி நிறுவனம் மீது அவதூறு வழக்குப் போட்ட அமெரிக்க தொழிலதிபர் - ஏன்?
கார் மார்க்கெட்டின் கதாநாயகன் ஃபெராரி. இந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து கார்களுக்கும் ஆட்டோ மொபைல் ஆர்வலர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும். பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்று கூறி வந்த ஃபெராரி நிறுவனம், தற்போது சற்று அதிர்ந்துதான் போயிருக்கிறது.
விஷயம் என்னவென்றால், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கார் ஆர்வலருமான பிரெஸ்டன் ஹென் என்பவர் ஃபெராரி நிறுவனத்தின் மீது ஃபுளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

பெராரி நிறுவனம், லாஃபெராரி காரின் புதிய ஓபன் டாப் கார் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. கடினமான டாப் அல்லது இலகுவான டாப் என இரு ஆப்ஷனின் லாஃபெராரி அறிமுகமாகப் போகிறது.
லிமிட்டட் எடிசன் என்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கார்களே தயாரிக்கப்பட்டன. அந்தக் காரை வாங்க விரும்பிய பிரெஸ்டன் ஹென், ஃபெராரி நிறுவனத்தை அணுகியுள்ளார். மேலும், அதன் விலையான 1 மில்லியன் டாலருக்கான (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.6 கோடி) காசோலையை ஃபெராரியின் அக்கவுண்ட்டில் செலுத்தியுள்ளார்.

சிறிது நாட்களுக்குப் பிறகு ஹென்னுக்கு லாஃபெராரி நிறுவனத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
தங்களது லிமிடெட் எடிசன் கார் அனைத்தும் விற்பனையாகி விட்டன என்றும், அதை வாங்குவதற்கான தகுதித் தேர்வில் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது காசோலையும் திருப்பி அனுப்பப்பட்டது.
இதைப் பார்த்து செம டென்ஷனான பிரெஸ்டென் ஹென், நேராக நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கிறார். தனக்கு ஃபெராரி கார் வாங்கத் தகுதியில்லை என்று கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்நிறுவனத்தின் மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மேலும், 75,000 டாலர்கள் தனக்கு மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
85 வயதைக் கடந்த ஹென், நீதிமன்றத்தில் ஃபெராரிக்கு எதிராக அவதூறு வழக்கைத் தாக்கல் செய்திருப்பது ஆட்டோ மொபைல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








