13கிமீ வேகத்தில் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்ட கார் - உச்சவேகவரம்பு எவ்வளவு தெரியுமா?
அதிவேகமாக சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்ட உலகின் முதல் கார் எது? அதன் வேகம் என்ன? என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
சாலைகளில் இந்த வேகத்தில் தான் வாகனங்களை செலுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான நிறிமுறைகளுடன் கூடியது ஆகும். ஆனால், இதெல்லாம் தற்போதைய காலகட்டத்தில் தான்.
ஆட்டோமொபைல் துறையின் ஆரம்ப கட்டத்தில், நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தற்போது இருப்பதைப் போன்ற தொழில்நுட்பங்கள் இருந்திராத காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் என்பது கட்டமைப்பிலும், வேகத்திலும், திறனிலும் மிகவும் குறைவானதாகவே இருந்தது.
தற்போது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதை அன்றாடம் காணக்கூடிய காட்சியே. ஆனால் உலகிலேயே முதல் முறையாக அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டவர் யார்? அந்த காரின் வேகம் எவ்வளவு? அபராதமாக விதிக்கப்பட்ட தொகை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகள் மிகவும் சுவாரஸ்யம் தரக்கூடியதாக உள்ளது.

நீங்கள் படத்தில் பார்க்கக்கூடிய இந்த காரானது உலகின் தொன்மையான கார் மாடல்களில் ஒன்றாகும். நவீன கால கார்களுக்கு மூதாதையர் என்றும் இதனைக் கூறலாம்.

13 கிமீ வேகம்
1896ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் கெண்ட் எனும் நகரில் இந்த காரை வால்டர் அர்னால்ட் என்பவர் 13 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்றார். இதனைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிவேகத்தில் சென்றதால், அந்தக் காரை தன்னுடைய சைக்கிளிலேயே துரத்திச் சென்று பிடித்துள்ளார்.

13கிமீ வேகத்தில் செல்வதே அதிவேகம் என்றால், அனுமதிக்கப்பட்ட வேகம் தான் என்ன என்ற ஆவல் நமக்கு ஏற்படலாம். ஆனால் இதற்கான விடை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

வேக உச்சவரம்பு
அப்போதைய காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வேக உச்சவரம்பு என்பது மணிக்கு வெறும் 3 கிமீ மட்டுமே. ஆக வால்டர் அர்னால்ட் தன் காரில் அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் 10 கிமீ கூடுதல் வேகத்தில் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சைக்கிளில் விரட்டிச் சென்ற காவலர் வால்டர் அர்னால்டுக்கு அபராதமாக விதித்தது ஒரு ஷில்லிங். ஷில்லிங் என்பது இங்கிலாந்து நாட்டு பைசா ஆகும். இந்திய மதிப்பில் இந்த அபராதத்தொகையின் மதிப்பு 62 பைசா.

அர்னால்ட் ஓட்டியது ஒரு சூப்பர் கார் அல்ல என்றாலும் அதிகபட்ச வேகத்திற்காக அவர் அந்த ஒரே நாளில் 4 முறை காவலர்களிடம் சிக்கியுள்ளார் என்பதும் சுவாரஸ்யமான தகவலே.

சிறிது ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் வேக உச்சவரம்பு மணிக்கு 22.5கிமீ ஆக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் லண்டன் முதல் பிரைட்டன் நகர் வரை நடந்த கார் பேரணி ஒன்றில் அர்னால்ட் இதே காருடன் பங்கேற்றார்.

ராயல் ஆட்டோமொபைல் கிளப் என்ற இங்கிலாந்தின் பழமையான கார் கிளப் மூலம் இன்றளவும் இந்த வருடாந்திர கார் பேரணி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ஹேம்ப்டன் கோர்ட் பேலஸில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் அர்னால்ட் பயன்படுத்திய வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த காரும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அர்னால்ட் பயன்படுத்திய காரில் 8 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இஞ்சின் இருந்துள்ளது. இந்த காரால் அதிகபட்சமாக மணிக்கு 30 முதல் 35 கிமீ வேகத்தில் செல்லலாம் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் அர்னால்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து அப்போதைய தினசரி நாளிதள்களிலும் செய்தியாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Click it and Unblock the Notifications








