லண்டனுக்கு காரில் சாகசப் பயணம் செல்லும் கோவை பெண்கள்!
கோவையை சேர்ந்த 4 பெண்கள் லண்டனுக்கு காரிலேயே சாகசப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக கோவையை சேர்ந்த 4 பெண்கள் காரிலேயே லண்டனுக்கு சாகசப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
பல தேசங்களை கடந்து பயணிக்கும் திட்டத்துடன் தங்களது சாகசப் பயணத்தை இந்த பெண்கள் வகுத்துள்ளனர். தொடர்ந்து கூடுதல் தகவல்களை காணலாம்.

திடமான திட்டம்
கோவையில் ஓட்டல் நடத்தி வரும் மீனாட்சி அரவிந்த் என்பவர்தான் இந்த திட்டத்தை வகுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டத்தை பற்றி யோசித்து வந்துள்ளார். சமீபத்தில் தனது தோழிகள் மூவரிடம் இந்த திட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்களும் தலையசைக்கவே இப்போது திட்டம் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

முன் அனுபவம்
ஏற்கனவே மீனாட்சி அரவந்த் தாய்லாந்து நாட்டுக்கு காரிலேயே சென்று திரும்பியுள்ளார். அதனால், பயணத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் முன் அனுபவம் இருப்பதாகவும் அதற்கான பணிகளை இப்போதே செய்து வருவதாகவும் ஃபேஸ்புக் மூலமாக தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டம்
அடுத்த ஆண்டு நம் நாட்டின் 70வது சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாடும் திட்டத்துடன் இவர்கள் பயணத்தை வகுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, பெண் உரிமை மற்றும் ரோட்டரி கல்வி ஆண்டு பற்றிய விழிப்புணர்வுக்காகவும் இந்த பயணத்தை பயன்படுத்த உள்ளதாக கூறியிருக்கின்றனர்.
Picture credit: NDTV

பெண் சாதனையாளர்கள்
தங்களது பயணத்தின்போது சாதனைப் பெண்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் உல்ளிட்ட பெண் சாதனையாளர்களையும் சந்திக்க உள்ளதாக மீனாட்சி அரவிந்த் தெரிவித்துள்ளார்.

வழி விபரம்
கோவையில் துவங்கி சீனா, மியான்மர், ரஷ்யா, போலந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த பயணத்திற்காக பல நாடுகளை கடப்பதற்கு 9 நாடுகளின் விசாக்களை அவர்கள் பெற வேண்டியிருக்கிறது.

நெடிய பயணம்
மொத்தம் 24,000 கிமீ தூரம் அவர்கள் பயணிக்க உள்ளனர். நாள் ஒன்றுக்கு 500 கிமீ தூரம் பயண இலக்கு வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26ந் தேதி தங்களது பயணத்தை இந்த பெண்கள் துவங்க உள்ளனர்.

சிறப்பு பயிற்சி
இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கும் 4 பெண்களுமே கார் ஓட்டுவதில் கை தேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, வழியில் கார் பழுதானால் அதனை சரிசெய்வதற்கான அடிப்படை பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். பல்வேறு கால நிலை மற்றும் சாலை நிலைகளை கடந்து செல்வதற்கு சிறப்பு உடற்பயிற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
picture credit: Facebook

தட்பவெப்பம்
வழக்கமாக மார்ச் மாதத்தில் கஜகஸ்தான் நாட்டில் கடும் பனிப்பொழிவு இருக்கக்கூடும். எனவே, அதற்கு தக்க முன் எச்சரிக்கையுடன் செல்ல தயாராகி வருகிறோம். மேலும், மியான்மர் வழியாக பயணிக்கும்போது, அந்நாட்டு ராணுவத்தினர் பாதுகாப்புக்காக உடன் வருவதாக தெரிவித்துள்ளதாகவும் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்றொருவரான மூகாம்பிகா ரத்தினம் தெரிவித்தார்.

சாகசப் பயணம்
இந்த சாகசப் பயணத்தை XPD-2470 என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளனர். பெண்களின் வல்லமையை உணர்த்தும் விதத்தில் இந்த பயணம் அமையும் என்று மீனாட்சி அர்விந்த் தெரிவித்துள்ளார்.

பயண செலவு
இந்த பயணத்திற்கு ரூ.60 லட்சம் செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர்.
பயணம் சிறக்க வாழ்த்துகள்!


Click it and Unblock the Notifications








