விருந்தோம்பலில் 7 நட்சத்திர அந்தஸ்து பெற்ற மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!
விருந்தோம்பல் முறையில் 7 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது உலகின் மிக சொகுசான ரயில்களில் ஒன்றான இந்தியாவின் மஹாராஜா எக்ஸ்பிரஸ். இந்த ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
விருந்தோம்பலுக்கான பிரிவில் 7 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது உலகின் மிக சொகுசான ரயில்களில் ஒன்றான இந்தியாவின் மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயில். ஸ்பெயின் நாட்டில் நடந்த விழாவில், ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏகே. மனோச்சாவிடம் இந்த விருது வழங்கப்பட்டது.
சர்வதேச அளவில் மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிடைத்திருக்கும் இந்த கவுரவம் மிகச்சிறப்பானது. இதன்மூலமாக, வெளிநாட்டினரையும் மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் கவர்ந்துள்ளது. ஒப்பிட முடியாத சொகுசு வசதிகள் மற்றும் விருந்தோம்பல் சேவையை மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் வழங்கி வருவதற்கு கிடைத்த பரிசு என்று மனோச்சா பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவிலேயே மிக சொகுசான ரயில் மஹாராஜா எக்ஸ்பிரஸ். பெயருக்கு ஏற்றாற்போல் இதில் பயணிக்கும் ஒவ்வொரும் தங்களை மஹாராஜா போன்று உணரும் வாய்ப்பை பெற முடிகிறது. இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்[IRCTC] மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து இந்த சொகுசு ரயிலை இயக்கி வருகிறது.

கடந்த 1982ம் ஆண்டு 'பேலஸ் ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் ராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக இந்த சுற்றுலா ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு இந்த ரயில் மஹாராஜா எக்ஸ்பிரஸ் என்ற புதிய பெயரில் சேவையை துவங்கியது.

கடந்த 2012, 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இந்த ரயில் உலகின் சிறந்த சுற்றுலா ரயில்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் மார்பெல்லா நகரில் நடந்த விழாவில் மஹராஜா எக்ஸ்பிரஸ் ரயிலின் விருந்தோம்பலுக்கு 7 நட்சத்திர அந்தஸ்து வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது மூலமாக மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அனைத்து பயணிகளும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு ரயிலில் அழைத்துச் செல்லப்படுவதும் இதன் சிறப்பு.

இந்த ரயிலில் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கிறது. இதில், 14 பெட்டிகள் பயணிகள் தங்குவதற்கான அறைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பெட்டிகள் அனைத்துமே ஏர் சஸ்பென்ஷன் அமைப்புடன் மிக சொகுசான பயணத்தை வழங்கும்.

இந்த பெட்டிகளில் 20 டீலக்ஸ் அறைகளும், 18 ஜூனியர் சூட் அறைகளும், 4 சூட் அறைகளும் மற்றும் ஒரு பிரசிடென்சியல் சூட் அறையும் உள்ளன. அனைத்துமே அரண்மனை போன்ற அமைப்புடனும், வசதிகளையும் பெற்றிருக்கிறது. இந்த ரயிலில் 88 விருந்தினர்கள் பயணிக்கலாம்.

பார்ப்பதற்கு மட்டுமல்ல, இந்த ரயிலில் பாரம்பரிய உணவுகள், மஹாராஜாக்களுக்கு விருப்பமான உணவு வகைகள் போன்றவற்றையும் ஆர்டர் செய்து பெறலாம். உணவு உபசரிப்பு முறையும் கூட மஹாராஜாக்களுக்கு வழங்கப்படுவது போன்றே இருக்கும்.

இந்த ரயிலில் திருமண சுற்றுலாவுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். 8 நாட்களுக்கான சுற்றுலாவிற்கு ரூ.5.5 கோடி கட்டணம். திருமண சுற்றுலா திட்டம் தவிர்த்து, சினிமா சூட்டிங் மற்றும் தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகிறது.

இந்த ரயிலில் உயர்தர படுக்கையறைகள், சாப்பாட்டுக்கூடம், உணவகம் போன்றவை அமைந்துள்ளன. அனைத்து பெட்டிகளும் வெப்பநிலையை தானாக கட்டுப்படுத்திக் கொள்ளும் வசதி கொண்டது. அத்துடன், எல்இடி டிவி, வைஃபை இன்டர்நெட் வசதி, தொலைபேசி வசதி, மதுவிடுதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளையும் பெற்றிருக்கிறது.

ஆக்ரா, ஜெய்ப்பூர், ரந்தம்போர், பிகானேர், ஜோத்பூர், உதய்பூர், பலசினோர், அஜந்தா, குவாலியர், கஜுராஹோ, வாரணாசி மற்றும் லக்ணோ ஆகிய சுற்றுலா இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 8 நாட்கள் மற்றும் 4 நாட்கள் சுற்றுலா திட்டங்களுடன் 5 விதமான டூர் பேக்கேஜ்களுடன் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் சுற்றுலா செல்வதற்கு குறைந்தபட்சமாக ரூ.1.93 லட்சம் முதல் ரூ.15.75 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உலகிலேயே காஸ்ட்லியான ரயில்களில் ஒன்றாகவும், ஆசியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான ரயிலாகவும் குறிப்பிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications








