பைக்கிற்கு பதிலாக சைக்கிளுக்கு மாறும் காலம் நெருங்கிவிட்டது: காரணம் உள்ளே!
பிரிட்டிஷைச் சார்ந்த கோஜுரோ மொபிலிட்டி என்னும் மின்வாகன தயாரிப்பு நிறுவனம் தனது புத்தம் புதிய இரண்டு பேட்டரி சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டில் இயங்கக்கூடிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக மத்திய, மாநில அரசுகள் மின் வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பிரிட்டிஷைச் சேர்ந்த கோஜுரோ மொபிலிட்டி என்ற மின் வாகன தயாரிப்பு நிறுவனம் தனது புத்தம் புதிய இரண்டு பேட்டரி சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக இந்த நிறுவனம் கொல்கத்தாவை மையமாகக்கொண்டு இயங்கும் கிர்தி சோலார் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்துடன் இணைந்து இந்த இரு சைக்கிளையும் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று, எதிர்கால மின் வாகனங்களையும் இந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிட இருப்பதாகவும் கோஜுரோ மொபிலிட்டி அறிவித்துள்ளது.

பேட்டரியால் ஓடும் இந்த சைக்கிள்கள் 'ஒன்' மற்றும் 'மைல்' ஆகிய இரண்டு வேரியண்ட்களில் களமிறக்கப்பட்டுள்ளன. ஒன் மாடல் பேட்டரி சைக்கிளின் விலை 32 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணியக்கப்பட்டுள்ளது. இது, 400Wh கொண்ட லித்தியம் பேட்டரியால் இயங்கிறது. இந்த பேட்டரி சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை செல்லும்.

இதேபோன்று, மற்றுமொரு மாடலான மைல், 29 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த சைக்கிளில் 300Wh லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 45 கிமீ தூரம் வரை செல்லக் கூடிய சக்தியை அளிக்கும்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கோஜுரோ மொபிலிட்டியின் சிஇஓ அனித் குமார் கூறியதாவது, "சமீபகாலமாக இந்திய அரசு மின் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இதைமுன்னிட்டு எங்களது நிறுவனத்தின் இரண்டு பேட்டரி சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம்" என்றார்.
மேலும், இந்த பேட்டரி சைக்கிளை இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் தென்-கிழக்கு ஆசியாவிலும் அறிமுகம் செய்திருப்பதாக அவர் கூறினார்.

இதையடுத்து, கோஜுரோ மொபிலிட்டி நிறுவனம், நடப்பாண்டில் 3 ஆயிரம் யூனிட் சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் யூனிட்களை விற்பனைச் செய்யவும் அது இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கோஜுரோ மொபிலிட்டி, தனது டெலிவ்ஆர், ஒன் டபிள்யூ மற்றும் ஜுரோ ஸ்மார்ட் ஆகிய பேட்டரி சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று, லண்டன் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் தனது பேட்டரி சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வு மற்றும் அந்த வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு இதுபோன்ற மின்வாகனங்களின் பயன்பாடு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இது சுற்றுப்புறச்சூழல் மட்டுமின்றி நமக்கும் நன்மையை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








