எச்பி பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் மட்டுமில்லைங்க இதுவும் கிடைக்கும்... என்ன தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
புதிய வசதியை வழங்குவதற்காக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வோல்ட்-அப் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இதற்கான காரணத்தை விரிவாகக் கீழே காணலாம்.

மின்சார வாகன பயனர்களுக்கு உதவுகின்ற வகையில் அண்மையில் இந்தியன் ஆயில் கார்பரேஷன், சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. முதல்கட்டமாக சண்டிகர் மாநிலத்திலேயே இச்சேவையை ஐஓசி தொடங்கியது.

தொடர்ந்து, புது தில்லி, குருகிராம், பெங்களூரு மற்றும் அம்ரித்ஸர் ஆகிய நகரங்களிலும் ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக ஐஓசி அறிவித்தது.

இம்மாதிரியான சூழ்நிலையில் நாட்டின் மற்றுமொரு முன்னணி ஆயில் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஐஓசி கொண்டு வந்தததைப் போலவே மின்சார வாகனங்களுக்கான ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையத்தை தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதற்காக வோல்ட்-அப் (VoltUp) எனும் நிறுவனத்துடன் இது கூட்டணியைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனமே இந்துஸ்தான் பெட்ரோலியத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்குகளில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் ஸ்வாப்பபிள் நிலையங்களைக் கட்டமைத்து வருகின்றது.

கூட்டணியைத் தொடர்ந்து முதல்கட்டமாக இரு பேட்டரி ஸ்வாப்பபிள் நிலையங்களை வோல்ட்-அப் ஜெய்பூரில் கொண்டு வந்திருக்கின்றன. விரைவில் நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த சேவையை இரு நிறுவனங்களும் விரிவாக்கம் செய்ய இருக்கின்றன.

தற்போது வரை மின்சார வாகனங்களின் விற்பனை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றது. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனையுடன் ஒப்பிடுகையில் மின்சார வாகன விற்பனை குழைந்தை பருவத்திலேயேக் காட்சியளிக்கின்றது.

இந்த நிலையை எச்பி பெட்ரோலியம் மற்றும் வோல்ட்-அப் கூட்டணி மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் மின்சார வாகன விற்பனை மிக மிக குறைந்த அளவில் காணப்படுவதற்கு காரணமாக இருப்பதே, போதிய சார்ஜிங் நிலையங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததே ஆகும். இந்த நிலையைப் போக்கும் வகையிலேயே புதிய கூட்டணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஆகையால், எதிர்காலத்தில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் பெட்ரோல் பங்குகளுக்கு இணையான எண்ணிக்கையில் மின்சார வாகன சார்ஜிங் மையங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் மின் வாகன விற்பனையை நிச்சயம் ஊக்குவிக்கும்.

பேட்டரி ஸ்வாப்பபிள் நிலையம் என்பது, மின்சார வாகனங்களுக்குத் தேவையான பேட்டரியை முழு சார்ஜ் திறனில் வழங்கும் நிலையங்கள் ஆகும். இதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் மின்சார வாகனத்தைச் சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்ற நிலை அடியோடு ஒழிக்கப்படும். அதாவது சார்ஜ் தீர்ந்த பேட்டரியை ஒப்படைத்துவிட்டு, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








