ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை கொண்டு செல்லும் பணியில் களமிறங்கிய குளோப்மாஸ்டர், இலுஷின் விமானங்கள்!
கொரோனா மருத்துவமனைகளுக்கு விரைவாக ஆக்சிஜன் சப்ளை வழங்கும் பணிகளில் இந்திய விமானப் படையின் குளோப்மாஸ்டர் சி-17 மற்றும் இலூசின் ஐஎல்76 ராட்சத விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் சப்ளையை முடுக்கி விடும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கி இருக்கின்றன. ஆனால், நிலைமை கையை மீறி சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகுக்கு ஆக்சிஜன் சப்ளையில் தடங்கல் ஏற்படும் நிலையால் விபரீதமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, நிலமையை கருத்தில்கொண்டு அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முயற்சியில் இந்திய விமானப் படையும் இணைந்துள்ளது.

ஆம், தனது குளோப்மாஸ்டர் சி-17 மற்றும் இலுசின் ஐஎல்-76 ராணுவ சரக்கு விமானங்களை ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை விரைவாக கொண்டு செல்லும் பணிகளில் களமிறக்கி உள்ளது இந்திய விமானப் படை. நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு மிக விரைவாக ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளை இந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக இந்த விமானங்களில் மிகப்பெரிய ராணுவ டிரக்குகள், ராணுவ தளவாடங்கள், பீரங்கிகள், ஆயுதங்கள், துருப்புகளை கொண்டு செல்ல முடியும். இந்த விமானங்களில் உட்புறத்தில் மிக தாராளமான இடவசதி உண்டு. இந்த நிலையில், ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் விசேஷ ரக டேங்கர் லாரிகள் இந்த இரண்டு விமானங்களிலும் எளிதாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

ரஷ்ய தயாரிப்பான இலுசின் ஐஎல்76 விமானத்தில் 40 டன் எடை கொண்ட லாரியை கொண்டு செல்ல முடியும். 4 எஞ்சின்கள் துணையுடன் இயங்கும் இந்த விமானம், மணிக்கு 850 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்திய விமானப் படை வசம் 14 இலுசின ஐஎல்76 விமானங்கள் உள்ளன.

இந்த விமானங்களில் பைலட்டுகளுக்கான முகப்பு கண்ணாடி தவிர்த்து, முகப்பின் அடிப்பாகத்திலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இது நேவிகேட்டர் அதிகாரி ஓடுபாதையை பார்ப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்கள் 25 ஸ்குவாட்ரான் முதல் 44 ஸ்குவாட்ரான் வரையிலான விமானப் படைப் பிரிவுகளுக்கு தலா ஒன்று வீதம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் தற்போது ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை கொண்டு செல்லும் பணிகளிலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்களை கொண்டு செல்வதிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான குளோப்மாஸ்டர் சி17 விமானத்தில் 80 டன் வரை சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். 4 எஞ்சின்களுடன் இயங்கும் இந்த விமானம் மணிக்கு 830 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது 4,480 கிமீ தூரம் வரை பறந்து செல்லும்.

இந்த இரண்டு விமானங்களின் மிக முக்கிய சிறப்பம்சமாக, குறைவான தூரம் கொண்ட ஓடுபாதைகளிலும், தற்காலிகமான ஓடுபாதையிலும் எளிதாக தரையிறக்க முடியும். அதேபோன்று, மேல் எழும்புவதற்கும் நீண்ட தூர ஓடுபாதைகள் தேவைப்படாது. இதனால், நாட்டின் எந்தவொரு இடத்திலுள்ள விமான நிலையத்திற்கும் இந்த விமானத்தை இயக்கும் வாய்ப்பு இருக்கிறது. மிக மோசமான வானிலையிலும் எளிதாக இயக்க முடியும்.

இந்த இரண்டு விமானங்களும் தற்போது கெரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆபத்பாந்தவனாக மாறி இருக்கின்றன என்றால் மிகையில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு மட்டுமின்றி, மருத்துவப் பணியாளர்களை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லும் மகத்தானப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








