பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார்... தீணி போட முடியாமல் தவிக்கும் மாணவர்!
ஐஐடி தேர்வில் அசத்திய மாணவருக்கு பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுக்க அம்மாணவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜேஇஇ தேர்வில் அசத்திய மாணவருக்கு, பயிற்சி நிறுவனம் சார்பில் பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கப்பட்டது.
ஆனால், அந்த கார் வேண்டாம் என்று மாணவரின் குடும்பத்தினர் திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதற்கான காரணங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் படிக்கலாம்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் நகரை சேர்ந்தவர் தன்மயா ஷெகாவத். இவர் 2016ம் ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வில் 11வது இடத்தை பிடித்து அசத்தினார். அவருக்கு பயிற்சி வழங்கிய சமர்ப்பன் பயிற்சி மையம், அவரது சாதனையை பாராட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியது.

இந்த நிலையில், அந்த காரை கட்டி தீணி போட முடியவில்லை என கூறி, அந்த காரை திருப்பி கொடுக்க தன்மயாவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் அந்த காருக்கு ரூ.85,000 வரை பராமரிப்பு செலவு ஏற்பட்டதாகவும், எனவே தொடர்ந்து அந்த காரை வைத்திருக்க இயலாத நிலை உள்ளதாகவும் தன்மயா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த காருக்கான பராமரிப்பு செலவு மிக அதிகமாக இருப்பதாகவும், மைலேஜ் மிக குறைவாக இருப்பதுமே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்த காரை திருப்பிக் கொடுக்க தன்மயா குடும்பத்தினர் முடிவு செய்துவிட்டனர். இந்த காரை வைத்துக் கொண்டு வேறு ஏதாவது பரிசு பொருள் அல்லது ஒரு லேப்டாப் கொடுத்தால் போதுமானது என்று தன்மயா தந்தை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சமர்ப்பன் பயிற்சி மைய இயக்குனர் வேறு காரணத்தை கூறியிருக்கிறார். காரை பரிசாக கொடுக்கும்போது, அந்த காரை வைத்துக்கொள்ள தன்மயா குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். மும்பையிலுள்ள தன்மயாவின் தாய்மாமா அந்த காரை வைத்துக்கொள்வதாக கூறினர். ஆனால், தற்போது சிறுநீரக கோளாறால் அவதியுற்று வரும் தன்மயாவின் தாயாருக்கு தேவைப்படும் மருத்துவ செலவுக்காக அந்த காரை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜேஇஇ தேர்வில் டாப்-100 இடங்களுக்குள் வந்த முதல் சிகர் பகுதி மாணவர் தன்மயா. அவருக்கு பிஎம்டபிள்யூ காரை கொடுத்து, அந்த படங்களை தங்களது விளம்பரத்துக்காக சமர்ப்பன் பயிற்சி மையம் பயன்படுத்தி உள்ளது. இதன்மூலமாக, பல மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் இந்தியாவில் ரூ.31 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.36 லட்சம் அடக்க விலை கொண்டது இந்த கார். இதுதான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாகவும் இப்போது இருக்கிறது.

சமீபத்தில் ஒலிம்பிக்கில் அசத்திய திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரும் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுப்பதாக அறிவித்தார். பராமரிப்பு செலவு மிக அதிகம் என்றும், தனது சொந்த ஊரான அகர்தலாவில் சாலைகள் மிக குறுகலாக இருப்பதும் காரணங்களாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








