பாஸ்டேக் மூலம் டோல்கேட் கட்டண வசூலில் புதிய சாதனை... ஒரே நாளில் இவ்வளவு கோடி ரூபாய் கலெக்ஸனா?
இந்தியாவில் பாஸ்டேக் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்டேக் முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக பாஸ்டேக் மூலமான சுங்க சாவடி கட்டண வசூல் தற்போது 90 சதவீதத்தை நெருங்கி வருகிறது. தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இந்த சதவீதம் உடனடியாக மேலும் அதிகரிக்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளின் அனைத்து லேன்களையும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கடந்த திங்கள் கிழமை பாஸ்டேக் லேன்களாக மாற்றியது. அதாவது கடந்த பிப்ரவரி 15-16ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு வெற்றிகரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு முன்பும் கூட இப்படியான அறிவிப்புகளை வெளியிடுவதும், பின்னர் காலக்கெடுவை நீட்டிப்பதுமாகதான் மத்திய அரசு இருந்தது. ஆனால் இம்முறை காலக்கெடு நீட்டிக்கப்படாமல், பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாகதான் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்று (பிப்ரவரி 18) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடைசி 2 நாட்கள் தொடர்ச்சியாக 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட டேக்குகள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் கட்டாயம் என்பதால், வாகன உரிமையாளர்கள் வேகமாக பாஸ்டேக்கிற்கு மாறி வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன் கடந்த பிப்ரவரி 17ம் தேதி இமாலய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பாஸ்டேக் மூலம் கிட்டத்தட்ட 60 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் அன்று ஒரே நாளில் பாஸ்டேக் மூலம் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூலில் இது ஒரு சாதனையாகும்.

அதாவது குறிப்பிட்ட ஒரு நாளில் பாஸ்டேக் மூலம் வசூலான அதிகபட்ச தொகை இதுதான். இதற்கு முன்பாக ஒரே நாளில் பாஸ்டேக் மூலம் இவ்வளவு தொகை வசூலானது கிடையாது. இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ''பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் ஒட்டுமொத்தமாக 87 சதவீதத்தை தொட்டுள்ளது.

வெறும் இரண்டே நாட்களில் 7 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 100க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் 90 சதவீதத்தை தொட்டுள்ளது. தற்போது பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் இந்த சதவீதம் இன்னும் உயரும்'' என்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வதற்காக பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் மூலம் சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்பதுடன், வாகனங்களின் விரைவான போக்குவரத்து உறுதி செய்யப்படும். இதுதவிர காகித பயன்பாடு குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக இடைவெளி என பாஸ்டேக் மூலம் இன்னும் பல்வேறு நன்மைகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








