இந்தியாவில் முதல் முறை... விவசாயிகளின் கஷ்டத்தை தீர்க்க வந்த அதிசய டிராக்டர்! விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் டிராக்டரில் ஏராளமான அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் விற்பனைக்கு வர தொடங்கி விட்டன. பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட குறைவாக இருப்பதால், பொதுமக்களின் கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது தற்போது திரும்பி வருகிறது.

தனி நபர் என்றில்லாமல், எலெக்ட்ரிக் வாகனங்களால் நாட்டிற்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு, எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவி செய்யும். இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களை போன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் காற்றை மாசுபடுத்தாது.

இதனால் காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நிச்சயமாக வரப்பிரசாதம்தான். ஆனால் தற்போதைய நிலையில், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் தயாரிப்புகள் வந்து கொண்டுள்ளன. விவசாய துறை தொடர்பான வாகனங்களில் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் எலெக்ட்ரிக் தயாரிப்புகள் வரவில்லை.

ஆனால் அந்த குறை தற்போது நிவர்த்தியாக தொடங்கியுள்ளது. ஆம், இந்தியாவின் முதல் மின்சார டிராக்டர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த செலஸ்டியல் இ-மொபிலிட்டி (Cellestial E-Mobility) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் இந்த எலெக்ட்ரிக் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனமாக இருப்பதுடன், அதிநவீன வசதிகளும் இதில் உள்ளன.

இந்த 6 எச்பி எலெக்ட்ரிக் டிராக்டரானது, 21 எச்பி டீசல் இன்ஜின் டிராக்டருக்கு இணையானது. இந்த மின்சார டிராக்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். 18 எச்பி பவரையும், 53 என்எம் டார்க் திறனையும் இந்த எலெக்ட்ரிக் டிராக்டர் அதிகபட்சமாக வெளிப்படுத்தும். அத்துடன் இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை இந்த எலெக்ட்ரிக் டிராக்டர் பெற்றுள்ளது.

பவர் சாக்கெட் மூலம் இந்த டிராக்டரை சார்ஜ் செய்யலாம். அத்துடன் பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பமும் உள்ளது. அதாவது சார்ஜ் தீர்ந்து விட்டால், ஏற்கனவே சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பொருத்தி கொண்டு, டிராக்டரை தொடர்ந்து இயக்க முடியும். எனவே பேட்டரியில் சார்ஜ் நிரப்புவதற்காக காத்திருக்கும் நேரம் மிச்சமாகும்.

இந்த தொழில்நுட்பம் இருப்பதால், சார்ஜ் ஏற்றுவது பெரிய தொந்தரவாக இருக்காது. மேலும் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்ஸ், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களுடன் தொடர்புடைய அனைத்து அதி நவீன வசதிகளையும் இந்த டிராக்டர் பெற்றுள்ளது. அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் இந்த மின்சார டிராக்டரை விற்பனைக்கு கொண்டு வர செலஸ்டியல் இ-மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் இந்த எலெக்ட்ரிக் டிராக்டரின் விலையை 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிக்க செலஸ்டியல் இ-மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும்.

எனவே 5 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், இந்த எலெக்ட்ரிக் டிராக்டர் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் வேளாண்மை துறையிலும், எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கியிருப்பது விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, இந்தியாவிற்கும் நல்ல விஷயம்தான்.

Image Source: Krishijagran
செலஸ்டியல் இ-மொபிலிட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எலெக்ட்ரிக் டிராக்டரை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என கூறப்பட்டுள்ளது. டீசலில் இயங்கும் டிராக்டர்களை விட இந்த மின்சார டிராக்டரை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு பயன்தரும் விஷயமாகதான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








