நமக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி... சீனாவுக்கு இது கெட்ட செய்தி!
சீன எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரண்டாம் தொகுப்பு ரஃபேல் போர் விமானங்கள் விரைவில் இந்தியா வர இருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக லடாக் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், உலகின் வலிமையான ராணுவ பலத்தை கொண்ட இந்தியா - சீனா இடையிலான இந்த எல்லைப் பிரச்னை இரு தரப்பிலும் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை உயர்த்தும் வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. இதில், முதல் தொகுப்பில் 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தது.

கடந்த செப்டம்பர் 10ந் தேதி இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டு, லடாக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அதிநவீன போர் விமானங்களின் வருகை, இந்திய பாதுகாப்புக் கொள்கையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.

மேலும், சீனாவின் ராணுவ பலத்தை எதிர்கொள்வதற்கான திறனையும் இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. இந்த சூழலில், இரண்டாவது தொகுப்பில் 3 அல்லது 4 ரஃபேல் போர் விமானங்கள் விரைவில் இந்தியா வர இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த புதிய ரஃபேல் போர் விமானங்கள் வரும் நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியா வந்து சேரும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து அடுத்த சில நாட்களில் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என்றும் அந்த தகவல் கூறுகிறது.

இதன்மூலமாக, 8 அல்லது 9 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த மாத மத்தியில் நாட்டின் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடும். தற்போது ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து முதல் ரஃபேல் போர் விமானப் படை பிரிவு செயல்படும். இரண்டாவது ரஃபேல் போர் விமானப் படை பிரிவு மேற்குவங்க மாநிலம் ஹஷிமாராவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த இரண்டு ரஃபேல் விமானப்படை பிரிவும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் நிறுவப்பட உள்ளது. மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி உள்ளது. இந்த விமானங்கள் அனைத்தும் இந்தியா வந்து சேர்ந்ததும், இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஃபேல் போர் விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படை விமானிகளுக்கு பிரான்ஸ் நாட்டில் வைத்து விசேஷ பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் வரை இந்திய விமானிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








