காஷ்மீரில் 11 கிமீ நீள குகை பாதையில் ரயில் சேவை துவங்கியது!
இந்தியாவின் மிக நீளமான குகை வழிப் பாதையில் நேற்று முதல் ரயில் சேவை துவங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் இந்த ரயில் சேவையை துவங்கி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
ஆசியாவின் இரண்டாவது நீளமான குகை வழி ரயில் பாதையான இதனை புதிய தொழில்நுட்பம் மூலமும், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பனிஹல்-காசிகுந்த் பகுதிகளை இந்த ரயில் பாதை இணைக்கிறது. இரு பகுதிகளுக்கும் தரை வழியாக 35 கிமீ தூரம் செல்ல வேண்டியிருந்த தூரம் தற்போது ரயில் பாதை மூலம் 18 கிமீ ஆக குறைந்துள்ளது.

திட்ட மதிப்பு
ரூ.1,691 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குகை ரயில் பாதை
பீர் பஞ்சால் மலை தொடர்களில் இந்த குகை வழி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள்
பிரபல ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் இந்த குகை வழிப் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தியது.

2005ல் துவக்கம்
மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2005ம் ஆண்டு துவங்கியது.

அயராத உழைப்பு
1,300 தொழிலாளர்கள், 150 பொறியாளர்களின் இரவு பகல் பாராத 7 ஆண்டு கால அயராத உழைப்பில் இந்த புதிய ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்
இந்தியாவில் முதன்முறையாக New Austrian Tunnelling Method (NATM) என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலையை குடைந்துள்ளனர்.

கடும் சவால்கள்
மோசமான சீதோஷ்ண நிலையில் கூட இடைவிடாது நடந்த கட்டுமானப் பணிகளால் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் அருண் கரம்பெல்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஏனெனில், மலையை குடைவதில் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வசதி
இந்த குகை பாதை முழுவதும் தண்ணீர் தடுப்பு மற்றும் தீ தடுப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குகைக்கு கீழே குகை
இந்த குகை ரயில் பாதையின் 440 மீட்டர் தூரம் ஜவஹர் குகைப் பாதைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் முதல் ரயில்
காஷ்மீரில் முதன்முதலாக 2008ம் ஆண்டில்தான் முதல் ரயில் சேவை துவங்கப்பட்டது. இது அம்மாநில மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியது. அந்த ரயில் சேவையையும் பிரதமர் மன்மோகன்சிங்தான் துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் வரவேற்பு
காஷ்மீரில் இந்த புதிய ரயில் பாதையில் இன்றுமுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








