8 புதிய பைலட் பயிற்சி மையங்களை அமைக்க அனுமதி... மத்திய அரசின் அதிரடி திட்டம்
வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவதை தவிர்க்கும் வகையில், 8 புதிய பைலட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிக விமானிகளை உருவாக்கும் முயற்சியாகவும் இந்த திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதே அளவுக்கு விமானிகள், விமான ஊழியர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலேயே விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி மையங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

இதனால், விமானி பயிற்சி பெறுவதற்கு பலரும் அயல்நாடு செல்லும் சூழல் இருக்கிறது. இதனை தவிர்க்கும் வகையில், இந்தியாவிலேயே அதிக விமானிகளை உருவாக்கும் வகையில், 8 புதிய பயிற்சி மையங்களை அமைக்கப்பட உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 8 புதிய பைலட் பயிற்சி மையங்களும் 5 விமான நிலையங்களில் அமைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி, கலபுர்கி, மஹாராஷ்டிர மாநிலம் ஜல்கான், மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் கஜுராஹோ, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள லிலாபரி ஆகிய விமான நிலையங்களில் இந்த புதிய பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையங்களானது சீதோஷ்ண நிலை மற்றும் ராணும் மற்றும் பொது விமானப் போக்குவரத்து குறைவாக இருப்பதால், பைலட் பயிற்சிக்கு சாதகமான சூழல் இருப்பதால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 8 புதிய விமான பயிற்சி மையங்கள் மூலமாக உலக அளவில் விமானிகளுக்கான பயிற்சி கேந்திரமாக இந்தியா மாறுவதற்கான சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பைலட் பயிற்சி பெறுவதற்கான அவசியத்தை தவிர்க்க உதவுவதுடன், அண்டை நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதனால், உலக அளவில் விமானி பயிற்சி துறையில் இந்தியா முக்கிய இடத்தை பெறும்.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விமான நிலை ஆணையம், கடந்த ஆண்டு இந்த புதிய பயிற்சி மையங்களை அமைப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி, பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தன. இதில், ஏசியா- பசிஃபிக், ஜெட்செர்வ், ரெட்பேர்டு, சம்வர்தனே மற்றும் ஸ்கைநெக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு புதிய பயிற்சி மையங்களை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இந்த துறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுபவம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றின அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

விமானி பயிற்சி மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஆண்டு வாடகை கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதுடன், விமான நிலைய உரிமத் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








