லக்ணோ- ஆக்ரா விரைவு சாலையில் 8 போர் விமானங்கள் தரையிறங்கும் அரிய நிகழ்வு!
லக்ணோ- ஆக்ரா இடையில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் 8 போர் விமானங்கள் தரையிறங்கி, டேக் ஆஃப் செய்ய இருக்கின்றன. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த ஆண்டு மே மாதம் நொய்டா- ஆக்ரா நகரங்களை இணைக்கும் யமுனா அதிவிரைவு சாலையில் மிராஜ்- 2000 போர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. போர் விமானத்தை தரையிறக்கும் வசதி கொண்ட இந்தியாவின் முதல் பொது பயன்பாட்டு சாலை என்ற பெருமையையும் அந்த சாலை பெற்றது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அதிவிரைவு சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 8 போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு மீண்டும் டேக் ஆஃப் செய்யப்பட உள்ளது. இதுபற்றிய விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

உத்தரபிரதேச தலைநகர் லக்ணோவிலிருந்து சுற்றுலா நகரமான ஆக்ராவிற்கு இடையில் 302 கிமீ தூரத்திற்கு புதிய அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் தீவிர முயற்சியில், உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் இந்த சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

வெறும் 22 மாதங்களில் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் இந்த விரைவு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. வரும் 21ந் தேதி முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் பிறந்தநாள் அன்று இந்த விரைவு சாலை திறப்பு விழா காண உள்ளது.

இந்த நிலையில், இந்த சாலையின் உலகத் தரம் வாய்ந்த கட்டுமானத்தை பரைசாற்றும் விதத்தில், திறப்பு விழா அன்று விமானப்படைக்கு சொந்தமான 8 போர் விமானங்கள் இந்த சாலையில் தரையிறக்கி, டேக் ஆஃப் செய்யப்பட உள்ளன.

லக்ணோ - ஆக்ரா இடையிலான இந்த புதிய நெடுஞ்சாலையில் பங்கர்மா என்ற இடத்தில் 2 கிமீ தூரத்திற்கு 8 போர் விமானங்களும் தரையிறங்கி, டேக் ஆஃப் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போர் விமானங்கள் தரையிறங்கும்போது பறவைகள் பறப்பதை கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிககை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று, மீட்புக் குழுவினர், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமானங்கள் தரையிறங்கி, டேக் ஆஃப் செய்வதற்கு அந்த பகுதியில் தற்காலிக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.

மேலும், போர் விமானங்களை தரையிறக்குவதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. பொது பயன்பாட்டு சாலைகளில் போர் விமானங்களை தரையிறக்கும் வசதி உலகிற்கு புதிதல்ல.

ஜெர்மனி, போலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பொது பயன்பாட்டு சாலையை ரன்வே போன்று பயன்படுத்தி போர் விமானங்களை தரையிறக்கும் வசதியை பெற்றிருக்கின்றன. இதன் மூலமாக, போர் சமயங்களில் விமானப்படை தளங்கள் எதிரிகளால் தகர்க்கப்பட்டால் கூட பொது பயன்பாட்டு சாலையில் போர் விமானங்களை எளிதாக தரையிறக்க முடியும்.

இதன்மூலமாக, போர் விமானங்களை தரையிறக்குவதற்கு கட்டமைப்பு வசதி கொண்ட இரண்டாவது பொது பயன்பாட்டு சாலை என்ற பெருமையை இந்த அதிவிரைவு சாலை பெற இருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த அதிவிரைவு சாலை பொது பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








