டக்கார் ராலியில் அதிர்ச்சி சம்பவம்... விபத்தில் சிக்கிய இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ்... தலையில் காயம் என தகவல்
சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி பந்தயத்தில் இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டக்கார் ராலி பந்தயத்தின் முதல் மூன்று ஸ்டேஜ் போட்டிகளை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தனர். இன்று நான்காவது ஸ்டேஜ் போட்டி நடந்தது. இதில், இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீரராக குறிப்பிடப்படும் சி.எஸ்.சந்தோஷ் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கினார்.
விபத்தில் சிக்கிய சந்தோஷை அவசர உதவி குழுவினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் காயம் ஏற்பட்டாலும் அவர் நலமுடன் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அவர் விரைந்து நலம் பெற இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
டக்கார் ராலியின் முதல் மூன்று ஸ்டேஜ் பந்தயங்களிலும் சி.எஸ்.சந்தோஷ் வெற்றிகரமாக நிறைவு செய்து வந்தார். மேலும், ஒவ்வொரு ஸ்டேஜிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வந்தார்.
இந்த நிலையில், சி.எஸ்.சந்தோஷ் விபத்தில் சிக்கி இருப்பது மோட்டார்ஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், டக்கார் ராலியில் முதல்முறையாக பங்கு கொண்ட இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற சி.எஸ்.சந்தோஷ் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கு கொண்டிருந்தார்.
ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியும் சி.எஸ்.சந்தோஷ் விபத்தை உறுதிப்படுத்தி இருப்பதுடன், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் ஆபத்துக்கள் நிறைந்த ராலி ரேஸ் பந்தயமாக டக்கார் ரேஸ் குறிப்பிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு பல நூறு மைல் தூரத்தை சவால்கள் நிறைந்த நிலப்பரப்பு மற்றும் பாலைவனத்தை கடந்து இலக்கை தொடும் வகையில் தொடரந்து இரண்டு வாரங்கள் நடத்தப்படுகிறது. இதில், வீரர்களின் மனநிலை, உடல் நிலை மற்றும் வாகனங்களின் தாங்கும் திறனை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு டக்கார் ராலியில் முதல் இந்திய வீரராக சி.எஸ்.சந்தோஷ் பங்குகொண்டார். தற்போது 7வது ஆண்டாக டக்கார் ராலியில் அவர் பங்கேற்ற நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








