இந்தியாவின் புதிய ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி போர்கப்பல் பற்றிய தகவல்கள்!
இந்தியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு பரைசாற்றும் விதத்தில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் வரும் 14ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. கோவாவில் நடைபெற உள்ள இதற்கான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதோடு, இந்த பிரம்மாண்ட விமானம் தாங்கி போர் கப்பலில் பயணிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ஐஎன்எஸ் விராத் விமான தாங்கி கப்பலைத் தொடர்ந்து இந்தியாவின் 2வது பெரிய விமானம் தாங்கி போர் கப்பல் என்ற பெருமையை ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா பெறுகிறது. தற்போது அரபிக் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கப்பல் கடந்த ஆண்டு நவம்பர் 16ந் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட போர் கப்பலின் பல சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ரஷ்ய கப்பல்
1987ல் சோவியத் யூனியனின் கடற்படையில் அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல், 1996ல் இயக்குவதற்கான செலவீனங்கள் மிக அதிகமாக இருந்ததால், இதன் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இலவசமாக கிடைத்தது
தனது கடற்படையை வலுவாக்கிக் கொள்ளும் விதத்தில் இந்த கப்பலை வாங்கிக் கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த கப்பலை இலவசமாக ரஷ்யா வழங்க முன்வந்தது. 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கப்பலை இந்தியா வசம் வந்தது. ஆனால், இதனை புனரமைத்து மாற்றங்களை செய்து தருவதற்கு 2.35 டாலர் பில்லியனை இந்தியா விலையாக கொடுத்து வாங்கியுள்ளது. 40 சதவீதம் மட்டுமே ஒரிஜினல் கப்பலாக இருக்கிறது. மீதமுள்ள 60 சதவீதம் புதிய கப்பலை போன்றே உருவாக்கப்பட்டது.

மன்னர் பெயர்
அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற பெயரில் சோவியத் யூனியன் கடற்படையில் செயலாற்றி வந்த இந்த விமானம் தாங்கி கப்பலை வாங்கிய இந்தியா ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்று பெயரிட்டது. முதலாம் நூற்றாண்டில் உஜ்ஜயினில் வாழ்ந்த பேரரசர் விக்கிரமாதித்யாவை நினைவுகூறும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டது. ஐஎன்எஸ் விக்ரம் கப்பலுக்கு மாற்றாக இது இந்திய கடற்படையில் சேவையாற்ற உள்ளது.

சோதனைகள்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யாவில் இந்த கப்பலின் முழு அளவிலான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. நடுக்கடலில் வைத்தும் பல சோதனைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கப்பலிலிருந்து விமானங்களை இயக்குவதற்கான சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றி பெற்றதால் தற்போது நாட்டின் பாதுகாப்புப் பணியில் முறைப்படி அர்ப்பணிக்கப்பட உள்ளது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கப்பலின் சிறப்பம்சங்களை காணலாம்.

3 கால் பந்து மைதானங்கள்
60 மீட்டர் பீம் கொண்ட இந்த கப்பலை முடிந்தவரை நீட்டி பெரிதாக்கியுள்ளனர். இது மிக பிரம்மாண்டமான போர் கப்பல் 284 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. 3 கால் பந்து மைதானங்கள் அளவுக்கு இடவசதி கொண்டது. இதனை மிதக்கும் விமான தளமாக குறிப்பிடுகின்றனர்.

அடுக்குமாடி கட்டடம்
இந்த விமானம் தாங்கி கப்பல் 20 மாடிகள் கொண்ட கட்டடத்திற்கு இணையான உயரம் கொண்டது. இந்த கப்பலில் 1,600 பணியாளர்கள் இருக்கின்றனர்.

உணவுப் பொருட்கள்
45 நாட்களுக்கு கடலிலேயே இருக்கும் அளவுக்கு வசதிகள் கொண்டது. ஒரு மாதத்திற்கு இங்குள்ள பணியாளர்களுக்காக ஒரு லட்சம் முட்டைகள், 20,000 லிட்டர் பால், 16 டன் அரிசி போன்றவை தேவைப்படுமாம். புனரமைக்கப்பட்டபோது இதன் சமையலறை சப்பாத்தி, தோசை சுடும் வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளது. 400 டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் 2 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

எடை
இந்த விமானம் தாங்கி போர்கப்பல் 44,500 டன் எடை கொண்டது. இந்த கப்பல் புனரமைக்கப்பட்டபோது 2,300 கிமீ நீளத்துக்கு புதிய மின் ஒயர்கள் மாற்றப்பட்டனவாம். அதாவது, இந்தியாவின் கடலோரத்தின் பாதி நீளத்துக்கு மின் ஒயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

மிக் ரக விமானங்கள்
இந்த போர் கப்பலில் ஒற்றை இருக்கை கொண்ட மிக் 29கே ரக போர் விமானங்களும், இரட்டை இருக்கை கொண்ட மிக் 29கேயுபி போர் விமானங்களும் இருக்கும் வசதிகள் கொண்டது. இதுதவிர, கா-28 மற்றும் கா31 ரக ஹெலிகாப்டர்களும் இருக்கும். இந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சி தருவதற்கும், சிமுலேட்டர்கள் மற்றும் பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை பணிகளை ரஷ்யாவே ஏற்றுக் கொண்டுள்ளது.

500 கிமீ கண்காணிப்பு
இந்த போர் கப்பலில் இருக்கும் ரேடார் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் மூலம் 500 கிமீ தூரத்துக்கு கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்கு பின்னர் இந்த கப்பலில் ஏவுகணைகளை பொருத்தும் திட்டமும் உள்ளது.

வேகம்
இந்த கப்பல் மணிக்கு 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். தொடர்ந்து 13,000 கிமீ தூரத்துக்கு பயணிக்கும் வல்லமை கொண்டது. கடந்த ஆண்டு ரஷ்யாவிலிருந்து 2 மாதங்கள் பயணித்து போர்கப்பல்கள் புடைசூழ இந்தியா வந்து சேர்ந்தது நினைவிருக்கலாம்.

ராணுவ பலம்
இந்த புதிய விமானம் தாங்கி போர்கப்பலின் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








