ரூ.60 கோடி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட இந்தியரின் காருக்கு துபாய் போலீஸ் அபராதம்!
அண்மையில் துபாயில் நடந்த ஏலத்தில் 'துபாய் 5' என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டை இந்திய தொழிலதிபர் பல்வீந்தர் ஷானி ரூ.60 கோடி கொடுத்து வாங்கினார். அவர் மீண்டும் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
துபாயில், வாகனங்களுக்கான பேன்ஸி நம்பர் பிளேட்டுகள் சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டன. செல்வ செழிப்பில் கொழிக்கும் அரபு எண்ணெய் வள அதிபர்களும், அந்நாட்டு தொழிலதிபர்களும் தங்களது காருக்கான பேன்ஸி நம்பரை வாங்குவதற்கு அங்கு குவிந்தனர்.
நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்த அந்த விழாவில் துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் இந்திய தொழிலதிபரான பல்வீந்தர் ஷானி என்பவரும் கலந்து கொண்டார். அங்கு ஏராளமான பேன்ஸி நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன.

அதில், துபாய் 5 என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டை இந்திய தொழிலதிபர் பல்வீந்தர் ஷானி ஏலத்தில் வாங்கினார். அதற்காக அவர் செலுத்திய தொகை இந்திய மதிப்பில் ரூ.60 கோடியாகும். அவரின் இந்த செயல் துபாயை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களையே வியக்க வைத்தது.

பல்வீந்தர் ஷானியிடம் ஏராளமான ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளன. அதில், ஒரு காருக்கு இந்த பேன்ஸி நம்பரை பயன்படுத்துவதற்காக வாங்கினார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், பல்வீந்தர் சிங் வாங்கிய அந்த நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார் மீண்டும் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆம், அவர் வாங்கிய துபாய் 5 என்ற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து, களத்தில் இறங்கிய போலீசார் சம்பந்தப்பட்ட அந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் மாற்றுத் திறனாளிகளுக்கான இடத்தில் பார்க்கிங் செய்ததற்காக 1,000 திர்ஹாம்ஸ் [இந்திய மதிப்பில் ரூ.18,000] அபாரதம் விதித்தனர். தனது செல்வாக்கை பயன்படுத்தி விடுபட்டு விடலாம் என்ற பல்வீந்தர் சிங்கின் சப்பை கட்டுகளும் துபாய் போலீசிடம் எடுபடவில்லை. ரூ.60 கோடி கொடுத்து வாங்கப்பட்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காருக்கு துபாய் போலீஸ் அபராதம் விதித்தது அந்நாட்டு மீடியாக்களில் பெரும் பரபரப்பாக செய்தியாக்கப்பட்டன. மேலும், அந்த நம்பர் பிளேட்டை பொருத்தி சில நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும், அந்த காரின் ஓட்டுனர் உரிமத்துக்கு 4 கருப்பு புள்ளிகளை வழங்கியிருக்கின்றனர். ஆனால், இந்த தகவலை பல்வீந்தர் சிங் மறுத்திருக்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கான இடத்தில் தான் பார்க்கிங் செய்யவில்லை என்றும் சப்பை கட்டு கட்டியிருக்கிறார்.

கார் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படும், அந்த கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்ததாகவும், தான் கொண்டு வந்திருந்த ஏராளமான தஸ்தாவேஜூகளை பார்க்கிங் செய்த இடத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வருவது கடினமாக பட்டது.

எனவே, தனது ஓட்டுனர் அந்த காரை கட்டடத்தின் முன்பாக வெறும் 30 வினாடிகளே நிறுத்தியிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். 30 வினாடிகள் வரை நிறுத்த அனுமதியுண்டு. ஆனால், அவர் காரை நிறுத்தியிருந்தபோது செக்யூரிட்டி மேனேஜர் மட்டுமே காரின் முன்பாக நின்றிருக்கிறார். பல்வீந்தர் கூறுவது போல 30 வினாடிகளுக்கு மேலாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் படங்களை வைத்து கையும் களவுமாக பிடித்து அபராதத்தை போட்டுவிட்டனர்.

ரூ.60 கோடி கொடுத்து பேன்ஸி நம்பர் பிளேட் வாங்கிய நபருக்கு ரூ.18,000 பெரிய விஷயமில்லை. ஆனாலும், விதிகளை மீறிய அவரது செயல் ஏற்புடையதல்ல என்று விமர்சித்து வருகின்றனர். பணத்தை வைத்து நம்பர் பிளேட்டை வாங்கலாம். ஆனால், எல்லோரையும் வாங்கி முடியும் என்று நினைப்பது தவறாக முடிந்துவிட்டது போலும்.


Click it and Unblock the Notifications








