டீசல் எஞ்சின் ரயிலை மின்சார ஆற்றலுக்கு மாற்றி உலகளவில் சாதனை படைத்த இந்திய ரயில்வே..!!
டீசல் எஞ்சின் ரயிலை மின்சார ஆற்றலுக்கு மாற்றி உலகளவில் சாதனை படைத்த இந்திய ரயில்வே..!!
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் டீசல் எஞ்சின் ரயிலை, மின்சார ஆற்றலில் இயங்கும் ரயிலாக உருமாற்றி உலக சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே துறை.

இந்திய அரசின் ரயில் தயாரிப்பு நிறுவனம் (DLW) , உத்தரப்பிரேதச மாநிலம் வாரனாசியில் இயங்கி வருகிறது. இங்கு தான் உலகிலேயே முதன்முறையாக டீசல் எஞ்சின் பெற்ற ரயிலை மின்சார ஆற்றலுக்கு மாற்றிய சாதனை நடந்தேறியுள்ளது.

டிஎல்டபுள்யூ நிறுவனத்தின் இந்த சாதனையை தலைமையேற்று நடத்தியவர் ராஷ்மி கோயல் என்ற பெண். இவர்தான் உத்தரப்பிரேதச ரயில் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பெண் மேலாளரும் ஆவார்.

டீசலில் இயங்கும் எஞ்சினை மின்சார ஆற்றலுக்கு மாற்றப்பட்ட திட்டம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் வெற்றியடைந்துள்ளது என்றார் ராஷ்மி கோயல்.

BHEL, CLW, RDSO போன்ற நிறுவனங்களின் மூத்த பொறியாளர்களை வைத்து, திட்டமிடலில் தொடங்கி செயல்வடிவத்துக்கு கொண்டு வந்தது என வெறும் 69 நாட்களில் இந்த சாதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையை பற்றி பேசிய டிஎல்டபுள்யூ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிதின் மெஹ்ரோத்தா, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய மின்சார ஆற்றல் பெற்ற ரயில் எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அவர், முந்தைய டீசல் எஞ்சினைக்காட்டிலும் இது மின்சார ஆற்றலுக்கு மாற்றப்பட்ட பின்னர் 92 சதவீதம் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
மின்சார ஆற்றலுக்கு மாற்றப்பட்டுள்ள இந்த டீசல் எஞ்சின் முன்னதாக 2600 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வல்லமை பெற்றதாக இருந்தது.

தற்போது இது மின்சார ஆற்றலில் உருமாற்றப்பட்ட பிறகு இது அதிகப்பட்சமாக 5000 பிஎச்பி பவரை வழங்கும் வல்லமையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் எஞ்சின் மின்சார ஆற்றலுக்கு உருமாற்றப்பட்ட இந்த சாதனை உலகளவில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த சாதனையை செய்த
பொறியாளர்களுக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் படி உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ’மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக டிஎல்டபுள்யூ நிறுவன செய்தி தொடர்பாளர் நிதின் மெஹ்ரோத்தா புகழாராம் சூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications








