பெட்ரோல் திருட்டு அச்சம் இனி இல்லை! பயன்பாட்டுக்கு வந்தது நாட்டின் முதல் ஊழியரில்லா பெட்ரோல் பங்க்!
கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவும், பெட்ரோல் திருட்டு அச்சத்தைப் போக்கும் விதமாகவும் நாட்டின் முதல் ஊழியரில்லா எரிபொருள் நிரப்பும் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா (கோவிட்-19) வைரஸ் பரவல் காரணமாக உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வாகனங்கள் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் வகுப்பிற்கு மாறியுள்ளன. இத்துடன் மிகப்பெரிய மாற்றமாக ஏடிஎம்-களில் பணம் எடுப்பது முதல் பல் குத்த குச்சி வாங்குவது முதல் அனைத்திற்கும் வரிசை என நாம் நம்ப முடியாத மாற்றங்கள் பல அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஏன், புதிதாக வாங்குவது மற்றும் அதனை டெலிவரி கொடுப்பதிலும்கூட புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பெல்லாம் புதிய வாகனங்களை வாங்க குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஷோரூம் சென்று கார்களைத் தேர்வு செய்து வந்தனர். ஆனால், இப்போதோ ஆன்-லைனில் கணினி முன்பு உட்கார்ந்து வாகனங்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

கொரோனா வைரசின் பிடியில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக இதுபோன்ற மாற்றங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், தற்போது பெட்ரோல் விநியோகத்திலும் புதுமையான மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மேலை நாடுகளில் காண்பதைப் போன்று தங்களுக்கு தேவையான பெட்ரோலை அவரவர்களே நிரப்பிக் கொள்ளும் புதிய திட்டம்தான் அது.

இத்தகைய பெட்ரோல் பங்க்தான் மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் நகரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கிற்கு 'ஆத்மனிர்பர்' நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு சுய சார்பு பெட்ரோல் பங்க் என அர்த்தம் ஆகும். நாட்டில் இம்மாதிரியான பெட்ரோல் பங்க் செயல்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

அதாவது, இந்த பெட்ரோல் பங்கில் பிற பெட்ரோல் பங்குகளைப் போன்று உங்களுக்கு சேவை வழங்க பணியாளர் இருக்க மாட்டார். ஆகையால், இந்த பங்கிற்குள் வாகனத்தை எடுத்துச் செல்வது முதல் நிறுத்திவிட்டு பெட்ரோல் செலுத்துவது வரை அனைத்தையும் நீங்களே செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான பெட்ரோல் அளவையும் நீங்களேதான் அளவிட்டுக் கொள்ள வேண்டும். எனவேதான் இந்த பங்கிற்கு பெயர் சுய சார்பு பெட்ரெல் பங்க் என பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பெட்ரோல் பங்க் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரசின் பிடியில் இருந்து பெட்ரோல் தன் ஊழியர்களை காக்கும் விதமாக சோதனையோட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நாட்டின் பிற பகுதியிலும் இம்மாதிரியான பெட்ரோல் பங்க் எதிர்பார்க்கப்படுகின்றது.

பங்கில் எதுவும் தெரியதா ஓர் நபர் சென்றால் அதை எப்படி கையாள்வார் என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு எழும்பியிருக்கும். இதனைத் தீர்க்கும் விதமாக என்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை விளக்கும் விதமாக அருகில் பெரிய அளவு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அது, உங்களுக்கு தேவையான எரிபொருளை எவ்வாறு நிரப்ப வேண்டும் என வழி நடத்தும்.

தற்போது, சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்கிற்கு புனே வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. அதாவது, ஊழியர் யாரேனும் இருந்தால் பெட்ரோல் கொள்ளை நடக்கும் என்ற அச்சம் இந்த சுய சார்பு நிலையங்கள் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இந்த பெட்ரோல் பங்குகளில் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அதன் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ஏற்கனவே உலக நாடுகள் பலவற்றில் பயன்பாட்டில் இருக்கின்றன. அங்கு குறிப்பிட்ட நபர் தனக்கு தேவையான எரிபொருளை அவரே நிரப்பி, அதற்கான தொகை அவரே ஏடிஎம் கார்டுகள் மூலம் செலுத்துவர். அதாவது, தேவையான பெட்ரோல் அளவைக் குறிப்பிட்ட பின்னர் அதற்கான தொகை ஸ்வைப் செய்து செலுத்த வேண்டும்.

அவ்வாறு, பணத்தைச் செலுத்திய பின்னர் பெட்ரோல் பம்ப் இயங்க ஆரம்பிக்கும். பின்னர், எரிபொருளை நிரப்பிக் கொண்டு அங்கிருந்து கிளம்பலாம். இதேமுறைதான் தற்போது புனேவில் பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வைரஸ் பரவலின் விகிதம் மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. எனவே, இதனைக் கட்டப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில்தான் தற்சார்பு பெட்ரோல் பங்க் கொண்டுவரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








