இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்திலிருந்து முதல்முறையாக தண்ணீரில் விடுவிக்கப்பட்டது. இரண்டு இழுவை படகுகள் மூலம் கட்டுதளத்திலிருந்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு முதல்முறையாக மிதக்கவிடப்பட்டது. இதன்மூலம், இந்தியாவின் போர்க்கப்பல் தயாரிக்கும் நிபுணத்துவம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
இந்த போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் முழுமை பெற்றதையடுத்து, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்து சொந்தமாக விமானம் தாங்கி போர்க்கப்பலை உருவாக்கும் தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் குறித்த பல சுவையான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெயர் குழப்பம்
இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கடந்த 1997ம் ஆண்டு கப்பற்படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, அதே பெயரில் இப்போது புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கப்பலை ஐஎன்எஸ் விக்ராந்த் ஆர்11 என்றும், புதிய கப்பலை ஐஎன்எஸ் விக்ராந்த் 2013 என்றும் அழைக்கப்படுகிறது.

ஐஎன்எஸ் விக்ராந்த் ஆர்11 - சில தகவல்கள்
இரண்டாம் உலகப்போரின்போது, எச்எம்எஸ் ஹெர்குலிஸ் என்ற பெயரில் இங்கிலாந்து அரசு தயாரித்த கப்பலை இந்திய அரசு வாங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்த கப்பல் திட்டத்தில் இங்கிலாந்து அரசு ஆர்வம் காட்டததையடுத்து, அந்த கப்பலை 1957ல் இந்தியா வாங்கியது. 1961 முதல் 1997 வரை இந்திய கப்பற்படையில் சேவையாற்றியது. இந்த விமானம் தாங்கி கப்பல் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் தனியார் கப்பல் உடைப்பு நிறுவனத்திடம் ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டுவிட்டது. அடுத்த ஸ்லைடிலிருந்து புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் தகவல்களை காணலாம்.

ஐஎன்எஸ் விக்ராந்த் 2013
கொச்சி கப்பல் கட்டுமானக் கழகம் மற்றும் கடற்படையின் கப்பல் இயக்குநரகத்தின் கூட்டு முயற்சியில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது. கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கட்டப்பட்டது. இந்த கப்பலை வடிவமைக்கும் பணிகள் 1999ல் துவங்கியது. 2009ம் ஆண்டு இந்த கப்பலின் அடிச்சட்டம் நிர்மாணிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கியது. 2013ம் ஆண்டு இந்த கப்பல் அறிமுகம் செய்யப்பட்டது. விக்ராந்த் என்றால் சமஸ்கிருத மொழியில் துணிச்சல் என்று பொருள்படுகிறது.

வடிவம்
இந்த விமானம் தாங்கி கப்பல் 860 அடி நீளமும், 200 அடி அகலமும் கொண்டது. 18 அடுக்குகள் கொண்ட கட்டடத்திற்கு இணையான உயரம் கொண்டது. இந்த கப்பல் 40,000 டன் எடை கொண்டது. இந்த கப்பலின் மேல்தளத்தில் விமானங்கள் மேலே எழும்புவதற்காக இரண்டு ஓடுபாதைகளும், விமானங்கள் இறங்குவதற்கு ஒரு பாதையும் உள்ளன. இதன் மேற்புறம் இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களுக்கு இணையான இடத்தை கொண்டது.

விமானங்கள்
இந்த கப்பலில் 36 போர் விமானங்களை நிறுத்த முடியும். ரஷ்ய தயாரிப்பான மிக் 29கே போர் விமானங்களையும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் நவீன வகை போர் விமானமான தேஜஸ் மார்க் 2 விமானத்தையும் இந்த போர் கப்பலில் வைத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள்
காமோவ் 31, வெஸ்ச்லேண்ட் சீ கிங் மற்றும் எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்களும் இந்த போர் கப்பலில் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. இந்த போர் கப்பலிலிருந்து 3 நிமிட இடைவெளியில் போர் விமானங்களை இயக்க முடியும். மேலும், அவசர காலங்களில் தேவைப்பட்டால், இரண்டு நிமிட இடைவெளியில் போர் விமானங்களை இயக்க முடியும்.

தாக்குதல் நடத்தும் திறன்
நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து ஏவுவதற்கான வசதிகளும், சிறிய வகை பீரங்கிகளும் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களிடமிருந்தும், வான் வழி தாக்குதல்களிலிருந்தும் தற்காத்துக் கொள்வதற்கான முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி மற்றும் கண்காணிப்பு வசதிகள் கொண்டிருக்கும்.

உயர்வகை உலோகம்
இந்த போர்க்கப்பலுக்கான 90 சதவீத உயர்வகை ஸ்டீல் இந்தியாவிலிருந்து சப்ளை பெறப்பட்டுள்ளது. இந்திய உலோகக் கழகம் சார்பில் ரூர்கேலா மற்றும் பிலாய் ஆலைகளில் இதற்கான மூன்றுவகை உயர்வகை உலோகங்கள் தயாரித்து சப்ளை செய்யப்பட்டன.

குட்டி விமானப்படை தளம்
இந்த போர்கப்பலில் 160 அதிகாரிகளும், 1,400 வீரர்கள் மற்றும் இதர பணியாளர்களுடன் இந்த போர்கப்பல் செயல்படும்.

எஞ்சின்
இந்த கப்பலில் 4 ஜெனரல் எலக்ட்ரிக் எல்எம்2500 எஞ்சின்களும், 2 கேஸ் டர்பைன்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக 80 மெகாவாட் சக்தியை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

ரேஞ்ச்
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 15,000 கிமீ தூரம் பயணிக்கும்.

வேகம்
மணிக்கு 52 கிமீ வேகத்தில் இந்த போர்க்கப்பல் செல்லும்.

மின் உற்பத்தி திறன்
இந்த கப்பலில் இருக்கும் மின் உற்பத்தி பிரிவுகள் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம், கொச்சி போன்ற பெரிய நகரங்களின் மின் தேவையை நிறைவு செய்ய முடியும்.

மதிப்பு
3,261 கோடி மதிப்பீட்டில் உருவாக்க திட்டமிடப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் பல்வேறு தாமதங்களால் இப்போது 14,000 முதல் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட உள்ளது.

சேவைக்கு எப்போது?
அடுத்த ஆண்டு கடலில் செலுத்தி முழு அளவிலான சோதனைகள் நடத்தப்பட உள்ளன. 2017ம் ஆண்டில் விமானங்களை நிறுத்தும் பணிகளும், சோதனைகளும் நடத்தப்படும். 2018ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








