இந்தியாவின் விமானப் போக்குவரத்து பற்றி சுவாரஸ்யங்கள்!
இந்தியாவின் விமானப் போக்குவரத்து குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக, இன்றைய தருணத்தில் விமானப் பயணங்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்த சூழலில் இந்தியாவில் விமானப் பயணங்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

உலகிலேயே அதிக வர்த்தக மதிப்பு வாய்ந்த 4வது விமானப் போக்குவரத்து துறை கொண்ட நாடு இந்தியா. 2020ம் ஆண்டில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறிவிடும் என்று புள்ளிவிபர கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2016ம் ஆண்டு இந்தியாவில் 131 மில்லின் பேர் விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதில், 100 மில்லியன் பேர் உள்நாட்டு பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டு நம் நாட்டில் 346 விமான தளங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது. இதில், 132 விமான தளங்கள் விமான நிலை அந்தஸ்தை பெற்றிருக்கின்றன. தற்போது நாட்டில் 49 விமான நிலையங்கள் முழுமையான செயல்பாட்டில் உள்ளன.

மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை துவங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதன்படி, 2019ம் ஆண்டில் நாட்டின் விமான நிலையங்கள் எண்ணிக்கை 150 ஆக உயரும். அதேபோன்று, 45 ஹெலிகாப்டர் இறங்கும் வசதி கொண்ட நிரந்த ஹெலிபேட் தளங்கள் உள்ளன.

நம் நாட்டிற்காக பிரத்யேக விமான போக்குவரத்து சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்தியாவில் விமானப் போக்குவரத்தை துவங்குவதற்கு குறைந்தது 20 விமானங்கள் கையில் இருக்க வேண்டும்.

அதேநேரத்தில், குறைந்தது 5 ஆண்டுகள் உள்நாட்டு போக்குவரத்தில் சேவை அளித்த பின்னர் வெளிநாடுகளுக்கு சேவையை துவங்க அனுமதிக்கப்படும் என்ற விதி கடந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதனால், உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு உடனடி சேவை துவங்குவதில் இருந்த தடங்கல் நீங்கியது.

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றன. டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை விமான நிலையங்கள் நாட்டின் பெரும்பான்மையான விமான போக்குவரத்தை கையாள்கின்றன.

நம் நாட்டில் மொத்தமாக 14 சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன. அதில், 3 சர்வதேச விமானங்கள் கேரளாவில் அமைந்துள்ளன. மேலும், அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்கள் தென் இந்தியாவில்தான் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 500 கிமீ தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் அமைந்துள்ளன.

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்தான் நாட்டின் மிகவும் போக்குவரத்து அதிகமான பரபரப்பான விமான நிலையம். உலகிலேயே பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில் 21வது இடத்தை வகிக்கிறது. ஆசிய அளவில் 10வது இடத்தில் உள்ளது. இந்த விமான நிலையம், கடந்த நிதி ஆண்டில் 55 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது.

ஏர் இந்தியா, இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் உள்ளிட்ட 22 உள்நாட்டு விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், இண்டிகோ நிறுவனம் கால அட்டவணைப்படி இயக்குவதில் பயணிகளிடம் பிரபலமாக விளங்குகிறது. அதேபோன்று, பயணிகளுடனான பிரச்னையிலும் அவ்வப்போது சிக்கி வருகிறது.

உள்நாட்டு விமான நிறுவனங்கள் 80 நகரங்களுக்கு மேல் சேவை அளித்து வருகின்றன. இதில், டெல்லி- மும்பை வழித்தடம்தான் நாட்டிலேயே விமான போக்குவரத்து மிகுந்த வழித்தடமாக உள்ளது.

நாட்டிலேயே மிக குறைவான நீள ஓடுபாதை கொண்ட சர்வதேச விமான நிலையம் நம்ம திருச்சிதான். இங்கு 8,136 அடி நீளமுடைய ஓடுபாதை இருக்கிறது. மிக நீளமான ஓடுபாதை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விமான மாடலான ஏர்பஸ் ஏ380 விமானத்தை தரை இறக்கும் வசதி டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே உள்ளது. ஏர்பஸ் ஏ380 விமானத்தை கையாளும் கட்டமைப்பு சென்னை விமான நிலையத்திற்கு இல்லை.


Click it and Unblock the Notifications