மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போயிங் பி-8ஐ விமானத்தின் சிறப்புகள்!
ஓகி புயல் காரணமாக கடலில் மாயமான தமிழக மீனவர்களை கடலில் தேடும் பணியில் பயன்படுத்தப்படும் போயிங் பி-8ஐ கடற்படை விமானத்தின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அழிவை தந்துவிட்டு சென்றுள்ளது. பொருட்சேதத்தை தாண்டி, கடலில் மீன்பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்ததும், பலர் மாயமாகி இருப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாயமான மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மீட்புப் பணியில் கடற்படை மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பாதவர்களை தேடும் பணியில் கடற்படையை சேர்ந்த 21 கப்பல்கள், 5 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை அதிகாரி பேட்டி அளித்தார். மேலும், தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படும் விமானங்களில் போயிங் பி8ஐ என்ற நவீன விமானங்களும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு கூறினார்.

ஏனெனில், இந்த விமானத்தின் மூலமாக மாயமான மீனவர்களை தேடும் பணி என்பது சிறப்பானதாக அவர் தெரிவித்தார். அதன்படி, மீனவர்களை தேடும் பணியில் இந்த விமானத்தின் பங்கு எவ்வாறு இருக்கும் என்பதை இந்த செய்தியில் காணலாம்.

கடற்படை அதிகாரி குறிப்பிட்டு கூறிய அந்த விமானத்தின் மாடல் போயிங் நிறுவனத்தின் பி- 8ஐ நெப்டியூன் [Boeing P-8I Neptune] என்பதாகும். இந்த விமான மாடல் கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.

இந்த விமானத்தை மிக நீண்ட தொலைவு தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்த முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 4,500 நாட்டிக்கல் மைல் [8,300 கிமீ ] தூரம் வரை பறக்கும். மணிக்கு 907 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. இதன் மூலமாக, மீனவர்களை மீட்கும் பணியை துரித கதியில் செய்து வருகிறது கடற்படை.
Recommended Video


இந்த விமானத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடேட்[BEL] நிறுவனம் தயாரித்து கொடுத்த டேட்டா லிங்க்-2 என்ற தொலைதொடர்பு சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, இந்திய கடற்படை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மற்றும் கரையிலிருக்கும் கடற்படை கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

மீனவர்களை கண்டறிந்தால், அவர்கள் பற்றி உடனடியாக தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக மிக சிறப்பான தொழில்நுட்பத்தை இந்த விமானம் பெற்றிருக்கிறது. அதேபோன்று, கடலில் தத்தளிக்கும் படகுகள், கப்பல்களையும் இந்த விமானத்தில் இருக்கும் ரேடியோ சாதனம் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்.

உதவி தேவைப்படும் படகுகள் அல்லது தத்தளிக்கும் படகுகளை கண்டறிந்தால், உடனடியாக அந்த இடம் குறித்து கடற்படை கப்பல்களுக்கு தகவல் அளித்து அங்கு விரைந்து செல்லவும் இந்த விமானம் உதவி புரியும். கடலில் இருக்கும் கப்பல்கள், படகுகளை துல்லியமாக கண்டறியும் வசதிகள் உள்ளன.

சென்னை அருகே அரக்கோணத்தில் இருக்கும் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்திலிருந்து இந்த விமானம் இயக்கப்படுகிறது. இந் விமானமானது 41,000 அடி உயரம் வரை பறக்கும். ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருக்கும் இந்த விமானத்தை துணை போர் விமானமாகவும் கூறப்படுகிறது. இதன்மூலமாக, இந்திய கடற் பரப்பில் 2,222 கிமீ தூரம் வரை போருக்கு பயன்படுத்த முடியும்.

மிக மோசமான சீதோஷ்ண நிலைகளிலும் தாக்குப் பிடித்து பறக்கும் வல்லமை வாய்ந்தது.

அமெரிக்க கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட இந்த விமான மாடல் தற்போது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் கடற்படைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு 8 விமானங்களுக்கு இந்தியா ஆர்டர் கொடுத்தது. 2015ம் ஆண்டு போயிங் பி-8ஐ விமானங்கள் அடங்கி பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது.

கடந்த ஆண்டு மேலும் 12 போயிங் பி-8ஐ விமானங்களுக்கு இந்தியா ஆர்டர் செய்துள்ளது. இந்த விமானம் 2009ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. 2013ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேவைக்கு வந்தது. இதுவரை 51 பி8ஏ என்ற மாடல்களும், 8 பி-8ஐ மாடல் விமானங்களும் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட போயிங் 737 விமானத்தின் அடிப்படையில் கடற்படை பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டமைப்புகள், சாதனங்களுடன் மாற்றம் செய்யப்பட்ட மாடல்தான் போயிங் பி-8ஐ விமானம்.

பறக்கும் கடற்படை தளம் போல இது செயல்படும். இந்த விமானத்தில் 5 வகையான கட்டுப்பாட்டு பிரிவுகள் இயங்கும். இதில், 2 விமானத்தை கட்டுப்படுத்தும் அதிகார அமைப்பாகவும், கண்காணிப்பு மற்றும் ஆயுதங்களை கையாள்வதற்கான 3 கட்டுப்பாட்டு அமைப்புகளும் உண்டு.

ரஷ்யாவிமிருந்து அதிக அளவிலான ராணுவ தளவாடங்களை வாங்கி வந்த இந்தியா தற்போது அமெரிக்கவுடன் நெருங்கிய ராணுவ வர்த்தகத்தை பேணி வருகிறது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திற்கு இந்தியா வழங்கிய முதல் ராணுவ ஒப்பந்தம் இதுவாகும்.

கடந்த 2014ம் ஆண்டு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-200இஆர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக நம்பப்படுகிறது. இந்த விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போயிங் பி-8ஐ விமானங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு மாயமான தமிழக மீனவர்களை தேடும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








