ஏவுகணையை துல்லியமாக செலுத்தி அசத்திய இந்தியாவின் புதிய ராணுவ ஹெலிகாப்டர்!
எல்சிஏ என்ற பெயரில் இலகு ரக போர் விமானத்தை இந்தியா உருவாக்கி வருவது பற்றியத் தகவல்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள். பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில்தான் இந்த புதிய போர் விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று, தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ராணுவ ஹெலிகாப்டரையும் இந்தியா உருவாக்கியிருக்கிறது. எல்சிஎச் என்ற ரகத்திலான இந்த இலகு எடை ஹெலிகாப்டர் சமீபத்தில் 70மிமீ ஏவுகணைகளை துல்லியமாக செலுத்தி அசத்தியிருக்கிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஹெலிகாப்டர் குறித்தத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை மாடல்
எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நவீன வகை ஹெலிகாப்டர்தான் இந்த எல்சிஎச். அதாவது, Light Combat Helicopter எனப்படும் இலகு வகையை சேர்ந்த தாக்குதல் நடத்தும் திறன் பெற்ற ஹெலிகாப்டர்.

அவசியம் என்ன?
கார்கில் போரின்போது, அதி உயர பிரதேசங்களில் எதிரிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு, இலகு வகை ஹெலிகாப்டர் மாடல் தேவை என்பதை இந்திய ராணுவம் உணர்ந்து கொண்டது. இதுகுறித்து, மத்திய பாதுகாப்புத் துறை ஆய்வு நடத்தி, 2006ம் ஆண்டில் இந்த ஹெலிகாப்டர் தயாரிப்பு திட்டம் கையிலெடுக்கப்பட்டது.

தயாரிப்பு
எல்சிஏ என்ற குறிப்பிடப்படும் தேஜஸ் விமானம் போன்றே, இந்த ஹெலிகாப்டர் தயாரிப்பும் பெங்களூரில் உள்ல ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்தான் மேற்கொண்டது. ரூ.376 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சோதனைகள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் வைத்து அதிக உயரத்தில் பறக்கவிட்டு சோதனைகள் செய்யப்பட்டுவிட்டன. மிக மோசமான வானிலைகளில் கூட 3200 மீட்டர் முதல் 4800 மீட்டர் உயரம் வரை சிறப்பாக பறக்கும்.

ஆயுத சோதனை
இந்த ஹெலிகாப்டரின் மூலமாக தரை தாக்குதல்களையும், வான் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை பொருத்தி சோதிக்கப்பட உள்ளது. அதில், சமீபத்தில் இந்த ஹெலிகாப்டரில் இருக்கும் லாஞ்சரிலிருந்து 70 மிமீ ஏவுகணைகள் செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்
இந்த ஹெலிகாப்டரில் மல்டி பங்ஷன் திரை விமானப்படை விமானிகளுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். லேசர் தொழில்நுட்பத்தில் இலக்கை குறி பார்த்து ஏவுகணைகளை செலுத்துவதற்கும், திரையுடன் கூடிய ஹெல்மெட் போன்றவையும் இந்த ஹெலிகாப்டரை இயக்கும் விமானிகளுக்கு மிகுந்த உதவியை அளிக்கும். ஹெலிகாப்டரை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்து எச்சரிக்கும் வசதியும் இருக்கிறது.

வடிவம்
16 மீட்டர் நீளத்துடன் மிகவும் குறுகலான உடற்கூடு அமைப்பை பெற்றிருக்கிறது. தரையிறங்கும்போது அல்லது அவசர சமயத்தில் வேகமாக மோதினாலும், சேதமடையாத சக்கரங்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு, தீப்பிடிக்காத விசேஷ பெட்ரோல் டேங்க்குகள், அணுசக்தி தாக்குதலிலும் பாதிப்பு ஏற்படுத்தாத காக்பிட் என பல்வேறு நவீன கால சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

டாப் ஸ்பீடு
இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 280 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 700 கிமீ தூரம் வரை பயணிக்கும். இரண்டு பேர் இயக்குவதற்கான இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 5,800 கிலோ எடையுடன் பறக்கும் திறன் கொண்டது.

ஹெவி ஆர்டர்
இந்திய வான் படைக்கு 65 எல்சிஎச் ஹெலிகாப்டர்களும், இந்திய ராணுவத்துக்கு 114 எல்சிஎச் ஹெலிகாப்டர்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வான் பாதுகாப்பை கட்டிக் காப்பதில் இந்தியாவே உருவாக்கி இருக்கும் இந்த எல்சிஎச் ஹெலிகாப்டருக்கு முக்கிய பங்கு இருக்கும்.

இந்தியாவின் புதிய போர் விமானம் தேஜஸ் பற்றிய தகவல்கள்!


Click it and Unblock the Notifications








