தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!
இந்தியாவின் நவீன ரயிலாக அறிமுகமாகிறது தேஜஸ் எக்ஸ்பிரஸ். இந்த ரயிலின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் சேவைக்கு வந்துள்ளது. மும்பை- கோவா இடையில் முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்படுகிறது. பிற ரயில்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் வண்ணத்தில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வினைல் ஸ்டிக்கர் வெளிப்புறத்தை அலங்கரிக்கிறது.

முதல்முறையாக தானியங்கி கதவுகளுடன் வரும் பயணிகள் ரயிலாகவும் இதனை குறிப்பிடலாம். உட்புறத்தில் இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணிக்கலாம்.

இந்த ரயிலில் 3+2 இருக்கை அமைப்புடன் 72 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும், 2+2 ஆகிய இருக்கை அமைப்புடன் 56 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. 2+2 இருக்கை அமைப்புடைய பெட்டிகள் மிக தாராளமான இடவசதியை அளிக்கும். ஆம்னி பஸ்களில் இருப்பது போல மிக சொகுசான புஷ் பேக் சீட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியாக 9 இன்ச் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண முடியும் என்பதுடன், ரயில் பற்றிய தகவல்களையும் பெற முடியும். திண்பண்டங்களை வைத்துக்கொள்வதற்கான சிறிய டேபிள், வைஃபை இன்டர்நெட் வசதி உள்ளிட்டவையும் இருக்கின்றன.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் உணவு பதார்த்தங்களை சூடு படுத்திக் கொள்வதற்கான ஓவன், காபி மற்றும் டீ வழங்கும் எந்திரம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. கழிவறைகள் மிக நவீன முறையில் இருப்பதுடன், கை கழுவுவதற்கான சோப்பு திரவம் வினியோகிக்கும் சாதனம், தானியங்கி தண்ணீர் குழாய்கள் போன்றவை பொருத்தப்பட்டு இருக்கிந்றன.

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தீ பிடிப்பது குறித்து எச்சரிக்கும் சாதனம், கெட்ட வாடைகளை ரயில் பெட்டியிலிருந்து அகற்றும் சாதனம் உள்ளிட்டவை ஹைலைட்டாக கூறலாம்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பெட்டிகள் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் பெட்டிகள்தான் இந்தியாவின் அதிவேகத்தில் செல்லும் திறன் பெற்ற ரயில் பெட்டிகளாகவும் கூற முடியும்.

ஆம், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரை இயக்குவதற்கான விசேஷ கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை தற்போது தண்டவாளங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின்படி, மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.

தேஜஸ் ரயில் பெட்டிகளில் ஸ்டெயிலெஸ் ஸ்டீல் பிரேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகை பிரேக்குகள் மிகவும் சிறப்பான செயல்திறனுடன் இருக்கும். எனவே, அதிவேகத்தில் இயக்கும்போதும் மிக குறைவான தூரத்திலேயே ரயிலை நிறுத்தும் வாய்ப்பு ஓட்டுனர்களுக்கு கிடைக்கும்.

மும்பை- கோவாவை தொடர்ந்து மும்பை- சூரத் மற்றும் டெல்லி- லக்ணோ இடையிலான வழித்தடங்களில் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சதாப்தி ரயில்களை காட்டிலும் கட்டணம் சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்பட உள்ளது. ஆனால், அதற்குரிய பல சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால், ரயில் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








