சூயஸ் கால்வாயில் சிக்கிய உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்!
மணல் புயலால் சூயஸ் கால்வாயில் சென்ற உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் சரக்கு கப்பல் சிக்கிக் கொண்டு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. கால்வாயின் குறுக்கே கப்பல் நிற்பதால் பிற கப்பல்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில், இந்த கப்பல் குறித்த பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூயஸ் கால்வாயில் சிக்கி நிற்கும் எம்வி எவர்கிவன் என்ற பெயர் கொண்ட கப்பல் உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல் மாடலாக குறிப்பிடப்படுகிறது. இந்த கப்பல் 2,20 லட்சம் டன் எடை கொண்டது. இந்த கப்பல் 399.94 மீட்டர் (1,312 அடி) நீளமும், 58.8 மீட்டர் அகலமும் கொண்டது. அதாவது, மூன்று கால்பந்தாட்ட மைதானங்களுக்கு இணையான நீள, அகலத்தை கொண்டது. பல அடுக்குமாடி கட்டங்களுக்கு இணையான உயரத்துடன் பிரம்மாண்டத்தில் மிரட்டுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இயக்க ஆரம்பிக்கப்பட்டது. ஜப்பானை சேர்ந்த இமபாரி ஷிப் பில்டிங் நிறுவனம்தான் இந்த கப்பலை கட்டியது. ஜப்பானை சேர்ந்த ஷோயி கிசென் கைசா என்பவருக்கு சொந்தமான இந்த கப்பலின் போக்குவரத்து வர்த்தகத்தை தைவானை சேர்ந்த எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கவனித்து வருகிறது. பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் சிங்கிள் லோ ஸ்பீடு 2 ஸ்ட்ரோக் டீசல் எஞ்சின் புரொப்பலருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. 11 சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சினை மிட்சுய் மேன் பி அண்ட் டபிள்யூ தயாரித்து கொடுத்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 79,500 எச்பி பவரை வெளிப்படுத்தும். ஒரே எஞ்சினில்தான் இந்த கப்பலின் பெரும்பாலான இயக்கம் நடக்கிறது.

அதிகபட்சமாக மணிக்கு 42.2 கிமீ வேகம் வரை கப்பல் செல்வதற்கான வல்லமையை கொடுக்கும். இந்த கப்பலில் 8 சிலிண்டர்கள் கொண்ட 4 டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. துறைமுகத்தில் கப்பல் திரும்புவதற்கான உந்து விசையை வழங்குவதற்காக 3,400 எச்பி பவரை வழங்கும் இரண்டு த்ரஸ்ட்டர் வகை எஞ்சின்களும் உள்ளன.

இந்த பிரம்மாண்ட கப்பலில் ஒரே நேரத்தில் 20,124 கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும். சீனாவிலிருந்து நெதர்லாந்து நாட்டிலுள்ள ரோட்டர்டாம் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்தை சந்தித்துள்ளது எம்வி எவர்கிவன் கப்பல்.

கால்வாயின் இருகரைகளையும் தொட்டு தரை தட்டி நிற்கும் இந்த கப்பலின் மீட்புப் பணிகளில் பல்வேறு சவால்கள் உள்ளன. மணல் புயலால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து திசை மாறி இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இதனால், மணிக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும், பல கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, மணல் புயலால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து தரை தட்டியதாக கூறப்படுகிறது.

பொதுவாக, சூயஸ் கால்வாயில் செல்லும் கப்பல்களின் மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற்காக சூயஸ் கால்வாய் நிர்வாகத்தின் வழிகாட்டு நிபுணர்கள் செல்வது வழக்கம். இந்த கப்பலிலும் இரண்டு பேர் இருந்தாக சொல்லப்படுகிறது. ஆனால், மணல் புயலால் கப்பலின் கேப்டன் திசையை மாற்றி இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், கப்பல் கரையை தட்டியுள்ள இடத்தில் மணலை அப்புறப்படுத்தி, கப்பலை மிதக்கவிடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்போது கப்பலின் நிலைத்தன்மை குலைந்துவிடக்கூடாது என்பதற்காக பக்கத்தில் இழுவை கப்பல்கள் நிறுத்தப்பட்டு, கப்பல் நகராமல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இழுவை கப்பல்கள் கொண்டு இழுக்கும் முயற்சிகளில் தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

கப்பலில் இருந்து கன்டெய்னர்களையும், எரிபொருளையும் அப்புறப்படுத்தி எடையை குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நிபுணர் குழுக்களுடன் கப்பல் நிறுவனமும், சூயஸ் கால்வாய் நிறுவனமும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. கப்பலில் எந்த ஒரு தொழில்நுட்ப பிரச்னையும் இல்லை என்பதால், கப்பலை சேதாரமின்றி, மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஹம்பர்க் துறைமுகம் அருகே சூறாவளிக் காற்று காரணமாக, இதே கப்பல் 25 மீட்டர் நீளமுடைய பார்ஜர் கப்பலுடன் மோதி விபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், எல்பே ஆற்றில் கப்பல்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த கப்பலை மீண்டும் விரைவாக மிதக்க விடுவதற்கு கப்பல் நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் பிற கப்பல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பை எம்வி எவர்கிவன் கப்பல் நிறுவனமும், காப்பீட்டு நிறுவனமும் வழங்க வேண்டி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








