நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகனின் அதிரடி நடவடிக்கைகள் அம்மாநில மக்களையும் கடந்து, இந்தியா முழுவதும் கவனம் பெற்று வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி, முதல்வர் அரியணையில் ஏறியது முதலே, பல்வேறு அதிரடி திட்டங்களை ஜெகன் மோகன் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறார்.

இதுதவிர அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுவது போன்ற விஷயங்களிலும், அவர் அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதன்படி சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உயிரை காப்பாற்றுவதற்காக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தனது கான்வாயை சாலையோரமாக சிறிது நேரம் நிறுத்தி வைத்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் இந்த நிகழ்வு ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று (செப்டம்பர் 2ம் தேதி) நடைபெற்றுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து, தாடேப்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று சென்று கொண்டிருந்தார். எப்போதும் போல் பாதுகாப்பிற்காக அவரது வாகனத்தை, பல்வேறு வாகனங்கள் பின்தொடர்ந்து வந்தன.

அப்போது கான்வாயை சாலையோரமாக நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு ஜெகன் மோகன் உத்தரவிட்டார். ஏனெனில் அவரது நீண்ட கான்வாய்க்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் அப்பகுதியை எளிதாகவும், வேகமாகவும் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக, தனது கான்வாயை நிறுத்தும்படி ஜெகன் மோகன் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்பேரில் கான்வாய் ஓரமாக நிறுத்தப்பட்டதும், ஆம்புலன்ஸ் அப்பகுதியை விரைவாக கடந்து சென்றது. சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அந்த ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. காயமடைந்த நபரின் பெயர் சபர்த்தினா சேகர் என ஆந்திராவில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒய்யுரு பகுதியில் இருந்து கண்ணாவரம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே விஜயவாடாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது ஜெகன் மோகனின் கான்வாயும் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தது. எனினும் ஆம்புலன்ஸை கண்டவுடன் கான்வாயை ஓரமாக நிறுத்தி அனைவருக்கும் முன்னுதாரணமான காரியத்தை ஜெகன் மோகன் செய்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பொதுவாக சாலையில் ஆம்புலன்ஸ் வந்தால், நாம் அதற்கு சரியான முறையில் ஒதுங்கி வழி விட வேண்டும்.

ஆனால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் இதனை பொறுப்புடன் செய்வதில்லை. எனவே உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அப்படி ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விடாமல், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்பவர்களுக்கு இச்சம்பவம் ஒரு முன் உதாரணம் என்றால் மிகையல்ல. ஜெகன் மோகன் ஆம்புலன்ஸ்களுக்கு இப்படி வழி விடுவது இது முதல் முறை கிடையாது.

இதற்கு முன்பு ஒரு முறை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை வரவேற்பற்காக, தாடேப்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து விஜயவாடா விமான நிலையத்திற்கு ஜெகன் மோகன் சென்று கொண்டிருந்தார். அப்போதும் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. குடியரசு தலைவரை வரவேற்க வேண்டியுள்ளது என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், ஆம்புலன்ஸ் செல்வதற்காக உடனே கான்வாயை ஜெகன் மோகன் நிறுத்தி விட்டார்.
ஆம்புலன்ஸ் அப்பகுதியை கடந்த பின்புதான் ஜெகன் மோகனின் கான்வாய் அங்கிருந்து புறப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் இந்த நடவடிக்கைகள், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விடும் விஷயத்தில், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








